Last Updated : 01 May, 2024 06:32 PM

1  

Published : 01 May 2024 06:32 PM
Last Updated : 01 May 2024 06:32 PM

பணிக்காலம் முடியும் முன்பே விலகல்: மதுரை காமராசர் பல்கலை துணைவேந்தர் ராஜினாமா

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ. குமார் ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். தனது பணிக்காலம் முடிவதற்கு 11 மாதங்கள் முன்பாகவே துணைவேந்தர் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.

தமிழகத்திலுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கிருஷ்ணனின் 3 ஆண்டு பணி காலம் முடியும் முன்பே, அவர் திருவாரூரிலுள்ள மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக தேர்வாகி, பணி அமர்த்தப்பட்டார். இவருக்கு பதிலாக காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜெ. குமார், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பிறகு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி பல்கலைக்கழக அலுவலர்களுக்கு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை மறுநிர்ணயம் செய்தல் போன்ற பல்வேறு சர்ச்சைகளும் அடுத்தடுத்து எழுந்தன.

தொடர்ந்து நிதி நெருக்கடியால் ஒவ்வொரு மாதமும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. சில மாதமாகவே பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஓய்வூதியர்கள், அலுவலர்கள் போராட்டம் நடத்தியே சம்பளம் பெறும் சூழலும் உருவானது. தமிழக அரசின் உயர் கல்வித்துறையில் துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் நெருங்கி அணுகி நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதிலும் சிக்கல் இருந்தது.

இதற்கிடையில் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு உடல்நிலை பாதித்து, சமீபத்தில் அவருக்கு அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது. இதற்கிடையே, பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி மற்றும் உடல்நிலை பாதிப்பு போன்ற காரணங்களால் துணைவேந்தர் ஜெ.குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார்.

இன்னும் அவருக்கு 11 மாதம் பணிக்காலம் இருக்கும் நிலையில், ஓரிரு நாளுக்கு முன்பு அவர் தனது ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கொடுத்துள்ளார். ஆளுநரிடம் இருந்து வரும் பதிலுக்காக அவர் காத்திருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

துணைவேந்தர் ராஜினாமா குறித்து பல்கலைக்கழக வட்டாரம் கூறுகையில், ‘‘துணைவேந்தர் பொறுப்பேற்ற முதலே அவர் தமிழக அரசுடன் சரிவர ஒத்துப்போகவில்லை என்ற சர்ச்சை இருந்தது. தேசிய கட்சி ஒன்றின் ஆதரவாளர் என்றும், ஆளுநர் சிபாரிசில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் பேசப்பட்டது. உயர் கல்வித்துறை அமைச்சர் மதுரை வந்தால் கூட அவரை நேரில் சந்திக்க தயங்கி சூழலும் அவருக்கு இருந்தது. இதுபோன்ற சூழலில் பல்கலைக்கழக நிதி பற்றாக்குறையை போக்க, அவரால் போதிய நடவடிக்கை எடுக்காதது ஒருபுறம் இருந்தாலும், தமிழக அரசிடம் இணக்கமாக பேசி, தேவையான நிதியை பெறுவதிலும் துணைவேந்தர் என்ற முறையில் அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது எழுந்தது.

தமிழக ஆளுநர் என்ன சொல்கிறாரோ அதன்படியே செயல்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அரசு உத்தரவு என்றாலும், பல்கலைக்கழக அலுவலர்களுக்கான மறு சம்பள விகிதம் நிர்ணயத்திலும் முறையான நடைமுறையை அவர் கையாளவில்லை என பாதிக்கப்பட்ட அலுவலர்கள் துணைவேந்தருக்கு எதிராக குற்றம் சாட்டினர். இதில் பாதிக்கப்பட்ட 57 பேர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தை அணுகி, பழைய சம்பளத்தை பெறுவதற்கான உத்தரவை பெற்றனர்.

பல்கலைக்கழகத்துக்கு எதிரான வழக்குகள், நிதி நெருக்கடி சமாளிக்க முடியாதது, தமிழக அரசுடன் இணக்கமாக சென்று நிதி பெறுவதில் சுணக்கம், ஏற்கனவே இருந்த ‘ஆடிட்’ ஆட்சேபனைகளுக்கு தீர்வின்மை போன்ற பல்வேறு சர்ச்சைகள் உடன், உடல்நலம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காகவே அவர் முன்கூட்டியே பணியில் இருந்து விடுவித்துக்கொள்வதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளார். இவரது ராஜினாமா ஏற்கும் பட்டத்தில் 2 சிண்டிகேட் உறுப்பினர், உயர்கல்வி அல்லது ஏதாவது ஒரு துறை செயலர் அடங்கிய குழு பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனிக்கும். இதன் மூலம் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றனர்.

துணைவேந்தர் ஜெ.குமார் கூறுகையில், ‘‘உடல் நிலை பாதிப்பு சூழல் கருதி ராஜினாமா செய்ய திட்டமிட்டு, ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். வேறு காரணம் எதுவுமில்லை. உடல் நலம் பாதிப்பு காரணமாகவே விலகி கொள்ள முடிவெடுத்துள்ளேன். ஆளுநரின் தகவலுக்காக காத்திருக்கிறேன்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x