Last Updated : 29 Apr, 2024 03:56 PM

 

Published : 29 Apr 2024 03:56 PM
Last Updated : 29 Apr 2024 03:56 PM

நிர்மலா தேவிக்கான தண்டனை விவரத்தை செவ்வாய்க்கிழமை அறிவிக்கிறது நீதிமன்றம்

பேராசிரியர் நிர்மலா தேவி | கோப்புப் படம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் நாளை (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும் என நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளுக்கு ஆசை வார்த்தை கூறி தவறான பாதைக்கு அழைத்ததாக, செல்போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவுசெய்து, 2018ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி நிர்மலா தேவியை கைது செய்தனர்.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து இதே வழக்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை குழுவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 2018ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி 1,160 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கை ஏப்ரல் 30ம் தேதிக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்று பேராசிரியர் நிர்மலா தேவி ஆஜராகாததால் தீர்ப்பு 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆஜராகினர். இதில் முருகன், கருப்பசாமி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அரசு தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்காததால், அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். மேலும், இந்த வழக்கில் 5 பிரிவுகளின் கீழ் பேராசிரியர் நிர்மலாதேவி குற்றவாளி என நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார்.

அப்போது நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், "தண்டனையை குறைத்து வழங்க வேண்டும். மேலும், தங்கள் தரப்பு வாதங்களை தெரிவிக்க, தண்டனையை நாளைக்கு (ஏப்.30) ஒத்தி வைக்க வேண்டும்" என வாதிட்டார். ஆனால், சி.பி.சி.ஐ.டி தரப்பு வழக்கறிஞரோ சந்திரசேகர் இன்றைக்கே தீர்ப்பு வழக்க வேண்டும் என முறையிட்டார். இதனால் வழக்கை பிற்பகல் 2:30 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

பின்னர் பிற்பகல் 2:50 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "நாளை செவ்வாய்க்கிழமை (ஏப்.30) தண்டனை விவரம் வழங்கப்படும்" என அறிவித்து நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். வாசிக்க > நிர்மலா தேவி வழக்கில் இருவர் விடுதலை ஏன்? - சிபிசிஐடி வழக்கறிஞர் விவரிப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x