Published : 25 Apr 2024 04:57 AM
Last Updated : 25 Apr 2024 04:57 AM

மின்மாற்றிகள் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு: தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோருக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021-23 காலகட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) சார்பில் 45 ஆயிரத்து 800 மின்மாற்றிகளை கொள்முதல் செய்ய ரூ.1182.88கோடிக்கு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரின் மூலமாக ஒப்பந்ததாரர்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகக்கூறி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சிறப்பு புலனாய்வுக் குழு: அதில், இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக சந்தேகம் கொள்ளத்தக்க வகையில் ஆதாரங்கள் உள்ளன என்பதால், உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து இந்தடெண்டர் முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, `இது தொடர்பாக பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்' என்றார்.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x