Published : 25 Apr 2024 04:40 AM
Last Updated : 25 Apr 2024 04:40 AM

பாஜக, காங். வேட்பாளரின் ஆதரவாளர்களிடம் பணம் பறிமுதல்; அமலாக்க துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

சென்னை: திருநெல்வேலி பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நெருங்கி வந்த நிலையில், திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்கள் ரயிலில் கொண்டு சென்ற ரூ.3.99 கோடி பணத்தை தாம்பரம் ரயில் நிலையத்தில் பறக்கும் படை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி பறிமுதல் செய்தனர்.

அதே தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்கு ஆதரவாக பணப் பட்டுவாடா செய்வதற்காக திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளரின் அலுவலகத்தில் வைத்திருந்த ரூ.28.51 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, ‘`பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’' என்று திருநெல்வேலி தொகுதி சுயேச்சை வேட்பாளர் சி.எம்.ராகவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக அமலாக்கத் துறை பதில் அளிக்க உத்தரவிட்டனர். இந்நிலையில், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ், ‘`தேர்தல் நேரத்தில் வேட்பாளரின் ஆதரவாளர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருதமுடியாது.

எனவே, இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்த இயலாது’' என்று பதில் மனு தாக்கல் செய்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x