Last Updated : 09 Apr, 2024 05:42 PM

 

Published : 09 Apr 2024 05:42 PM
Last Updated : 09 Apr 2024 05:42 PM

விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார் டிஜிட்டல் பிரச்சாரம் - ‘கியூஆர் கோடு’ ஒட்டிய அமைச்சர் பொன்முடி

ரவிக்குமாரின் டிஜிட்டல் பிரச்சாரத்திற்கான QR Code-ஐ ஒட்டினார் அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்: விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரின் டிஜிட்டல் பிரச்சாரத்துக்கான கியூஆர் கோடு விவரத்தை திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள வீடு ஒன்றின் சுவற்றில் அமைச்சர் பொன்முடி ஓட்டினார்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் வேட்பாளர் ரவிக்குமார் இன்று திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இதன் ஒரு பகுதியாக வேட்பாளர் ரவிகுமாரின் டிஜிட்டல் பிரச்சாரத்துக்கு கியூஆர் கோடு (QR Code)-ஐ ருவெண்ணைநல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் சுவற்றில் அமைச்சர் பொன்முடி ஓட்டினார்.

தொடர்ந்து அருகில் இருந்த வீடுகளுக்கு சென்று மக்களிடம் உரையாடி வாக்கு சேகரித்தார். இதைத் தொடர்ந்து வேட்பாளர் ரவிக்குமார் அருகிலிருந்த கடைகளில் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். டிஜிட்டல் பிரச்சாரம் குறித்து விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கூறியது: “முதன்முறையாக 2024 மக்களவைத் தேர்தலில் டிஜிட்டல் வெளியிலும் தனது பிரச்சாரத்தை விசிக துவங்கியுள்ளது. இது அதிகளவு இளைஞர்களை சென்று சேரும் விதமாக கியூஆர் கோடு மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.‌

விசிக சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் காணப்படும் கியூஆர் கோடு-ஐ செல்போனில் பார்க்கும்போது கைப்பேசி திரையில் தோன்றும் ரவிக்குமார், கடந்த முறை எனக்கு வாக்களித்து, விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்தீர்கள். எனது கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் முதல் முறையாக மினி டைட்டில் பார்க் விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலைவாய்ப்பு பெற உள்ளனர். நம்முடைய மாவட்டத்தில் கல்வி வளர்ச்சிக்கும், சுகாதார மேம்பாட்டிற்கும் முன்னுரிமை அளித்து பணியாற்றி இருக்கிறேன்.

குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் அதிகம் காணப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பதற்கு 130 சுகாதாரக் கிளை நிலையங்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறியும் கருவியை வழங்கியுள்ளேன். அதேபோல கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை முதல்முறையாக நமது மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

மேலும், நாடாளுமன்றத்தில் சிறுபான்மை மக்களின் நலனுக்காகவும், மாநில உரிமைக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் குரல் கொடுத்துள்ளேன். தொடர்ந்து உங்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் என தெரிவித்துள்ளார். இந்த கியூ ஆர் கோடு விழுப்புரம் நகர் மற்றும் கிராம பகுதி கடைவீதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் சாலைகளில் ஓட்டுப்பட்டுள்ளது‌. இதன் வாயிலாக இனிமேல் விழுப்புரம் தொகுதி மக்கள் மக்களவை உறுப்பினரின் 5 ஆண்டு கால செயல்பாடுகள் குறித்து தங்கள் கைபேசியிலேயே தங்கு தடையின்றி எளிதாக காணலாம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x