Published : 04 Apr 2024 09:30 AM
Last Updated : 04 Apr 2024 09:30 AM

‘எனது படங்களில் சாதி பெயர் ஏன்?’ - திருமாவளவனை ஆதரித்து பிரச்சாரம் செய்த கமல் விளக்கம்

சிதம்பரத்தில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து, சிதம்பரம் மேலவீதியில் பிரச்சாரம் செய்யும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

கடலூர்: சிதம்பரத்தில் திமுக கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சிதம்பரம் மேல வீதியில் நேற்று இரவு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “மக்களோடு ஒன்றாக கலக்காத அரசாக பாஜகவின் மத்திய அரசு இருக்கிறது. அனைத்து சித்தாந்தங்களும் மக்களுக்காகத்தான். அதற்காகத்தான் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தல் களம் கண்டுள்ளோம். ‘இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து’ என்று வெளி நாட்டு அறிஞர்கள் கவலைப் படுகிறார்கள். நாங்கள் வீரர்கள்; களம் கண்டே ஆக வேண்டும். இந்தத் தேர்தலில் நாங்கள் தியாகம் செய்யவில்லை; வியூகம் செய்துள்ளோம்.

இன்றையத் தேவையை அன்றே உணர்ந்து வந்தவர் திருமாவளவன். தன் வாழ்வை சமூகத்துக்கு கொடுத்தவர்.குரலற்றவர்களின் குரலாக, பெருஞ்சிறுத்தையாக திருமாவளவன் திகழ்ந்து வருகிறார்.

‘சாதியம் தான் என் வாழ்வின் எதிரி’ என்று அரசியலுக்கு வருவதற்கு முன்பே நான் முடிவு செய்துவிட்டேன். ‘எனது படங்களில் சாதி பெயர் வருகிறது’ என்று நீங்கள் நினைக்கலாம், குடியைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்றால், குடிகாரனைத்தான் மையப்படுத்த வேண்டும், அதுபோல தான் பெயர்கள் வைக்கப்படுகின்றன.

இன்னும் எத்தனைப் பேர் அடிமை விலங்கோடு உள்ளனர் என்பதை அறியவே சாதி வாரி கணக்கெடுப்பு கேட்கிறோம். ஆங்கிலேயர்கள் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு சனாதனவாதிகள் பதறினார்கள். மண்டல் கமிஷனை வி.பி.சிங் அமல்படுத்த முயன்றபோது அதனை தடுக்க முயன்றார்கள்.

தமிழக மீனவர்களை காக்கத் தவறியது இந்த பாஜக அரசு. தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப்படுத்தி ஏலம் விடும் பழக்கம் இன்று நடைமுறையில் இருக்கிறது. 10 ஆண்டுகளில் மத்திய அரசு ஒன்றுமே செய்யவில்லை.

விவசாயிகள் பிரச்சினையில் ஆதார விலையை தராமல், ஆதரவு விலையை தருவதாக கூறினார்கள். இதனை எதிர்த்த விவசாயிகள் மீது ‘ட்ரோன்’ மூலம் குண்டு வீசினார்கள். நான் நகரத்தில் இருந்தாலும், தினமும் சோறு சாப்பிடுகிறேன் அந்த நன்றிக்காக பேசுகிறேன். ‘2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்’ என்றார்கள். ஒருவருக்கும் வேலை கொடுக்கவில்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மலிவு விலையில் மக்கள் சொத்தை வாரி வழங்கி வருகின்றனர்.

சட்டத்தை வளைத்து அதிகாரப்பூர்வமாக பணத்தை பறிக்கும் முறை தான் தேர்தல் பத்திரத் திட்டம். தொழிலதிபர்களை வழிக்கு கொண்டு வர அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றை பாஜக ஏவிவருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒட்டு மொத்த தமிழர்களின் குரலாக திகழ்கிறார். ஒடுக்கப்பட்டோருக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் என அனைவருக்குமான தலைவர் திருமாவளவன்.

பாஜக அரசு சமூக நீதிக்கு எதிரானது. சமத்துவ, சமூகநீதி அரசியல் சமையலுக்கு உகந்தது இந்தப் பானை. இந்தியாவே சிதம்பரத்தை திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து திருமாவளவனை வெற்றி பெற செய்யுங்கள்” என்றார் கமல்ஹாசன். திமுக மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x