Published : 04 Apr 2024 04:39 AM
Last Updated : 04 Apr 2024 04:39 AM

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏப்.12-ல் தமிழகம் வருகை: கோவை, நெல்லையில் பிரச்சாரம்

ராகுல் காந்தி | கோப்புப்படம்

சென்னை: தமிழகத்துக்கு 12-ம் தேதி வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை, திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரும் தமிழகம் வந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அதற்கான பயண திட்டத்தை வகுத்து டெல்லி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஸ்டாலினுடன் இணைந்து.. இந்நிலையில், ராகுல் காந்தி 12-ம்தேதி தமிழகம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியபோது, ‘‘12-ம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி, கோவை, திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. திருநெல்வேலியில் முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x