Published : 29 Mar 2024 05:44 AM
Last Updated : 29 Mar 2024 05:44 AM

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக விசைப்படகு மீனவர்கள் 7 பேரைநிபந்தனையுடன் விடுதலை செய்தும், படகின் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் ஜுலை 11-ம் தேதி நேரில் ஆஜராகவும் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து மார்ச் 20-ம் தேதி கடலுக்குச் சென்ற மோகன், மகத்துவம் ஆகியோருக்குச் சொந்தமான 2 படகுகளை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், அந்த படகுகளில் இருந்த ஜஸ்டின் திரவியம், கோவிந்தன், முனியராஜ், ஆரோக்கியம், சகயா நிக்சன், முத்துராமலிங்கம், முனியசாமி ஆகிய 7 மீனவர்களைச் சிறை பிடித்தனர்.­­

அவர்கள் மீது எல்லை தாண்டுதல், அனுமதியின்றி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்டபிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிலத்தீப், தமிழக மீனவர்கள் மீண்டும்இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும், வரும் ஜூலை 11-ம்தேதி 2 படகுகளின் உரிமையாளர்கள், உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி, வழக்கை தள்ளிவைத்தார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x