Published : 27 Mar 2024 08:36 AM
Last Updated : 27 Mar 2024 08:36 AM

‘பம்பரம்’ கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டி: துரை வைகோ

துரை வைகோ

திருச்சி: பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என்று மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் மதிமுக பொதுச் செயலாளரின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.

இந்நிலையில், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கோரிய மனு மீது இன்று (புதன் கிழமை) காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை நடைப்பயிற்சியின்போது தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: “சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் பிற கட்சிகள் வஞ்சிக்கப்படுகின்றன. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கும் கரும்பு விவசாயி சின்னம் தரவில்லை. அவர்கள் தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் கூட அந்த சின்னத்துக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். அதுபோலவே இப்போது எங்களுக்கும் பம்பரம் சின்னத்தில் பிரச்சினை செய்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என நாங்கள் நம்புகிறோம். ஒருவேளை பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் மாற்று திட்டங்களும் வைத்துள்ளோம். அதன்படி வேறு சின்னத்தில் போட்டியிடுவோம்.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x