Published : 27 Mar 2024 05:28 AM
Last Updated : 27 Mar 2024 05:28 AM

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா? - இன்று முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

சென்னை: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கோரிய மனு மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி எங்கள் தரப்பு கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ள தேர்தல் ஆணையம் இன்னும் எங்களுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (இன்று) கடைசி நாள் என்பதால் எங்களது கோரிக்கையை விரைவாக பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரினார்.

அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி 2 தொகுதிகளுக்குள் மேல் போட்டியிடும்பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். 14 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி முடிவு எடுப்பார் என விளக்கமளித்தார்.

அப்போது நீதிபதிகள், பம்பரம் சின்னம் பொது சின்னம் பட்டியலில் உள்ளதா, இல்லையா என்பது குறித்து பிற்பகலுக்குள் விளக்கமளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி இந்த வழக்கு நேற்று பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் மதிமுக கோரியுள்ள பம்பரம் சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை. இருப்பினும் மதிமுகவின் மனு மீது நாளை (இன்று) காலைக்குள் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மதிமுக தரப்பில் இந்த வழக்கை நாளைக்கு (இன்று) தள்ளி வைக்க வேண்டுமென கோரப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மதிமுக வேட்பாளர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டுள்ளதாலும், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளருக்கு பம்பரம் சின்னம் கோரியுள்ளதாலும், அதுதொடர்பான மதிமுகவின் மனு மீது நாளை (இன்று) காலை 9 மணிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x