Last Updated : 25 Mar, 2024 11:54 AM

 

Published : 25 Mar 2024 11:54 AM
Last Updated : 25 Mar 2024 11:54 AM

ஓட்டுநர் உயிரிழப்பு விவகாரம்: உடலை அடக்கம் செய்ய உறவினர்களுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

ஓட்டுநர் முருகன்

மதுரை: காவல்துறையினர் தாக்குதலில் ஓட்டுநர் மரணம் அடைந்த விவகாரத்தில் முருகனின் உடலை இன்று (திங்கள்கிழமை) மாலை 4 மணிக்குள் வாங்கி உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூரைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் முருகன். வேன் ஓட்டுநரான முருகன் கடந்த 8 ஆம் தேதி அச்சம்பட்டியில் உள்ள மக்களை ஏற்றிக்கொண்டு கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.

முப்பிடாதியம்மன் கோயில் அருகே வந்தபோது அப்பகுதியில் உள்ள ஆட்டோ மீது வேன் மோதியது. அப்போது அங்கு போக்குவரத்துப் பணியில் இருந்த காவலர்கள் முருகனை தாக்கியதில் மயக்கமடைந்த அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முருகன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

காவல்துறையினர் அடித்ததால்தான் முருகன் இறந்தார் எனக்கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து வடக்குப்புதூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மீனா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மருத்துவமனையில் மார்ச் 9ம் தேதி உடற்கூறாய்வு நடைபெற்றது. ஆனால் இதுவரை உடற்கூறாய்வு அறிக்கையை குடும்பத்தினருக்கு கொடுக்க மறுக்கின்றனர். இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. தங்கள் தரப்பு மருத்துவர்கள் முன்னிலையில் மறு உடற்கூறாய்வு நடைபெற வேண்டும்.

மேலும் காவலர்கள் தாக்கி உயிரிழந்த முருகனின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்கவேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், “முருகன் மரணம் சம்பந்தமாக இதுவரை 45 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

தொடர்ந்து இறந்தவரின் மனைவி மீனா நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதியிடம் நேரில் தனது வாக்குமூலத்தை தெரிவித்தார். மேலும் மூன்று சாட்சிகளிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.

இதனை பதிவு செய்த நீதிபதி இறந்து போனவரின் உடலை இன்று மாலை 4 மணிக்குள் உறவினர்கள் பெற்று இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன் இந்த வழக்கின் விரிவான உத்தரவு மாலை 4 மணிக்கு பிறப்பிக்கப்படும் என கூறி ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x