Published : 10 Mar 2024 06:14 AM
Last Updated : 10 Mar 2024 06:14 AM

போலீஸார் தாக்கியதால் வேன் ஓட்டுநர் இறந்ததாக புகார்: சங்கரன்கோவிலில் மக்கள் சாலை மறியல்

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வடக்குப் புதூர் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் முருகன் (37). வேன் ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம் இரவு அச்சம்பட்டி கிராமத்தில் இருந்து சிலரை வேன் மூலம் சங்கரன்கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

சங்கரன்கோவில் அருகே மற்றொரு வாகனத்தில் வேன் மோதிவிபத்துக்குள்ளானது. அப்போது,அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், வேனைஓட்டி வந்த முருகனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், வேனில் இருந்தவர்களை கீழே இறக்கி விட்டுவிட்டு, சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையத்துக்கு போலீஸார் முருகனை கொண்டு சென்றனர்.

அங்கு முருகன் மயக்க நிலையில் இருந்ததால், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிசெய்தனர். இதையடுத்து, முருகன்உடலுடன் வேனை சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையம் முன்பு போலீஸார் நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த முருகனின் உறவினர்கள், சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் தாக்கியதால் முருகன் இறந்துவிட்டதாகக் கூறி, உடலை பிரேதப்பரிசோதனைக்கு எடுத்துச் செல்லவிடாமல் தடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சங்கரன்கோவில்- ராஜபாளையம் சாலையில் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

3 போலீஸார் மீது வழக்கு: இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் எஸ்.பி.க்கள் டி.பி.சுரேஷ்குமார் (தென்காசி), சிலம்பரசன் (திருநெல்வேலி) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.நேற்று அதிகாலை 4 மணியளவில் முருகனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இறந்த முருகனின் மைத்துனர் சங்கர்குமார் (30) என்பவர் அளித்த புகாரின்பேரில், அடையாளம் தெரியாத 3 போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து முருகனின் உறவினர்கள் கூறும்போது, “உயிரிழந்த முருகனின் மனைவிக்கு அரசு வேலை, இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். அவர்களது 3 குழந்தைகளின் கல்விச் செலவைஅரசு ஏற்க வேண்டும். அனுபவம்மிக்க மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். முருகன் மரணத்துக்கு காரணமான காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x