Last Updated : 18 Mar, 2024 06:21 PM

 

Published : 18 Mar 2024 06:21 PM
Last Updated : 18 Mar 2024 06:21 PM

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு கிருஷ்ணகிரி தொகுதி ஒதுக்கீடு - ஐஸ்கீரிம் வழங்கி கொண்டாட்டம்

திமுக கூட்டணியில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புக்கு பதிலாக கோடை வெயிலின் தாக்கம் குறைக்கும் வகையில் 'ஐஸ்கீரிம்' வழங்கி கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி: திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அக்கட்சியினர் பொதுமக்களுக்கு ஐஸ்கீரிம் கொடுத்தும், பட்டாசுக்கள் வெடித்தும் கொண்டாடினர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியானது. இதில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா பகுதியில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவர் சேகர் தலைமையில் கட்சியினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களுக்கு இனிப்புக்கு பதிலாக 'ஐஸ்கீரிம்' வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு மக்களவை உறுப்பினராக செல்லகுமார் செயல்பட்டு வருகிறார். தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் துரைசாமி, ஆடிட்டர் வடிவேல், நெடுங்கல் சுப்பிரமணி, கலைப்பிரிவு மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x