Published : 07 Feb 2018 03:53 PM
Last Updated : 07 Feb 2018 03:53 PM

சென்னை போலீஸாரின் சிறப்பான பணி; ரவுடிகள் கைது குறித்து விஷால் பாராட்டு

 பூந்தமல்லியில் ரவுடிகளை கைது செய்த போலீஸாரின் பிரமிக்கத்தக்க பணிக்கு தாம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் விஷால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சினிமாவில் தாதாயிசத்துக்கு எதிராக சண்டைபோட்டு ரவுடிகளை பந்தாடும் காட்சிகளில் நடித்து கைத்தட்டல் வாங்கிய நடிகர் விஷால் போலீஸார் நிஜத்தில் நடத்திக்காட்டிய கைது நடவடிக்கையை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

நேற்று பூந்தமல்லியில் ரவுடிகளை சுற்றி வளைத்து போலீஸார் கைது செய்தனர். இதற்கு முன்னர் சென்னையில் நடந்திராத ஒன்று. பல காவல் நிலையங்களில் தேடப்பட்டு வரும் அனைத்து ரவுடிகளும் ஆயுதங்களுடன் ஒரே இடத்தில் குவிந்திருக்கும் போது அதிரடியாக சினிமா பாணியில் போலீஸார் கைது செய்திருப்பதற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

ரவுடிகள் கண்காணிப்பு தனிப்படை போலீஸாருக்கு காவல் ஆணையர் விருது வழங்கி பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் போலீஸாரின் இந்த செயலை வெகுவாகப் பாராட்டியுள்ளார். கையும் களவுமாக ரவுடிகளை கைது செய்தது குறித்து பாராட்டி பதிவு செய்துள்ள விஷால் காவல் ஆணையர் மற்றும் திறம்பட திட்டம் வகுத்து அனைவரையும் வளைத்துப் பிடித்த துணை ஆணையர் சர்வேஷையும் பாராட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x