Published : 05 Mar 2024 11:59 AM
Last Updated : 05 Mar 2024 11:59 AM

“பிரதமரை சந்தித்ததில் எந்த அரசியலும் கிடையாது” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: “அரசாங்கத்தை சிறப்பாக நடத்துவது என்பது சாதாரண பணி கிடையாது. அதையெல்லாம் கடந்துதான் நாங்களும், முதல்வரும் பணி செய்து வருகிறோம். இன்றுகூட ஒரு நாளிதழில் எனக்கும், பிரதமருக்கும் தனிப்பட்ட உறவு இருப்பது போல் செய்தி வந்துள்ளது. முதல்வர் கொடுத்த பணியைத் தான் நான் செய்தேன். அதனால் தான் மதுரைக்குச் சென்று பிரதமரை வரவேற்று வழி அனுப்பி வைத்தேன், அதில் எந்த அரசியலும் கிடையாது, அரசாங்கத்தின் பணியை நான் செய்தேன்“ என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விழா மேடையில் பேசிய அமைச்சர் பிடிஆர், “திராவிட இயக்கத்துக்கு நாங்கள் 4 ஆவது தலைமுறையாக பணி செய்து வருகிறோம். ஆட்சியில் இருக்கிறோமோ இல்லையோ, மக்களுடைய தொடர்பையும் மக்கள் நலனையும் கவனத்தில் வைத்துக் கொண்டு செயல்படுவது மிகவும் முக்கியம். அரசாங்கத்தில் இருக்கும் பொழுது நிர்வாகத்தை சிறப்பாக நடத்த வேண்டும், அரசாங்கத்தில் இருக்கிறோமோ இல்லையோ அரசியல் என்ற அடிப்படையில் மக்கள் நலனை தினமும் காக்க வேண்டும் என்பது நல்ல இயக்கத்தின் கடமையாகும், அடையாளமாகும்.

அரசாங்கத்தை சிறப்பாக நடத்துவது என்பது சாதாரண பணி கிடையாது. அதையெல்லாம் கடந்துதான் நாங்களும், முதல்வரும் பணி செய்து வருகிறோம். இன்று கூட ஒரு நாளிதழில் எனக்கும் பிரதமருக்கும் தனிப்பட்ட உறவு இருப்பது போல் செய்தி வந்துள்ளது. முதல்வர் கொடுத்த பணியை தான் நான் செய்தேன். அதனால் தான் மதுரைக்குச் சென்று பிரதமரை வரவேற்று வழி அனுப்பி வைத்தேன், அதில் எந்த அரசியலும் கிடையாது, அரசாங்கத்தின் பணியை நான் செய்தேன். சிலர் போலி செய்திகளை பரப்புகின்றனர்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பத்தாண்டுகள் மோடி அரசாங்கம் டெல்லியில் உள்ளது, 10 ஆண்டுகளில் எத்தனை முறை தமிழகத்துக்கு வந்து சென்று உள்ளார், எதற்காக வந்து சென்றுள்ளார், அரசியல் செய்வதற்காக மட்டுமே பிரதமர் தமிழகத்துக்கு வருகிறாரே தவிர, தேர்தல் நெருங்கும் நேரத்தில் பலமுறை தமிழகத்துக்கு வருகிறாரே தவிர, உண்மையான மக்கள் நலன் அக்கறை இருந்தால் புயல் வந்த பொழுது சென்னை அல்லது தூத்துக்குடிக்கோ வந்து மக்களை சந்திக்கவில்லை. புயலின் பாதிப்பை நேரில் கண்காணிக்கவில்லை.

பிரதமர் அரசியல் மட்டும் செய்யாமல், அரசாங்கம் ரீதியாகவும் தமிழகத்துக்கு சிறப்பான கவனம் செலுத்தி எங்கள் தேவைகளை நியாயமான கோரிக்கைகளை வேண்டுகோள்களை கவனத்தில் கொண்டு ஒழுங்காக நியாயமாக செயல்பட்டால் நாங்கள் பாராட்டுவோம். ஜனநாயகத்தின் முக்கிய பொறுப்பில் பிரதமர் இருக்கிறார், அதனால் அவரை வரவேற்கவும், உதவி செய்வதற்காகவும் வழி அனுப்புவது பொறுப்பு வகிக்கும் அரசாங்கத்தின் வேலை. அதனடிப்படையில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து இந்தப் பணியை செய்ய எனக்கு கட்டளை வந்தது. அதை நான் நிறைவேற்றினேன். அது அரசாங்கத்தின் பணி. தனிநபரின் விருப்பமோ, அரசியலோ கிடையாது” என்றார்.

தேர்தல் பத்திரம் தொடர்பாக கூடுதல் அவகாசத்தை எஸ்பிஐ கேட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “நானும் 20 ஆண்டுகள் வங்கியில் பணியாற்றினேன். இவ்வளவு பெரிய ஒரு பொருளாதார நாட்டில் இருப்பதில் பெரிய வங்கிக்கு இவ்வளவு கம்மியான தகவலை மூன்று அல்லது ஆறு மாதத்தில் அளிக்க முடியவில்லை என்றால் அதைக் கேட்கும் பொழுது நடுங்குகிறது. அப்போது வங்கிகள் சிஸ்டமே ஒழுங்காக இருக்கிறதா இல்லையா என்று பயம் வருகிறது. தரவுகளை நாளைக்கே சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அதனை வழங்கும் திறனை எஸ்பிஐ வங்கி கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வங்கி தொழிலிலேயே இருக்கக் கூடாது.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x