Published : 08 Nov 2023 04:17 PM
Last Updated : 08 Nov 2023 04:17 PM

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்களில் ஒருவராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் நியமனம்

ருக்மணி பழனிவேல்ராஜன் | கோப்புப் படம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்களாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞரின் மனைவி உள்பட 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்காராக சுமார் 18 ஆண்டுகள் பதவி வகித்த கருமுத்து தி.கண்ணன் உடல்நலக்குறைவால் கடந்த மே 23-ம் தேதி உயிரிழந்தார். அதற்குப் பின் இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் க.செல்லத்துரையை கோயில் தக்காராக நியமித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது. இதற்கிடையில், மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் பதவியை பிடிக்க பெருநிறுவனங்களின் தொழிலதிபர்களிடையே கடும் போட்டி இருந்தது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவியது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், நவ.6-ம் தேதி 5 பேரை அறங்காவலர்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் விவரம்: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில், தமிழ்நாடு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959 சட்டப்பிரிவு 46(3)ன்கீழ் திருக்கோயில்கள் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை சொக்கிகுளம் வல்லபாய் ரோடு சுப்பராயன் என்பவரின் மகள் ருக்மணி பழனிவேல்ராஜன் (வயது 83), மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த பி.கே.எம்.செல்லையா (வயது 70), மதுரை காந்தி நகர் சூமேக்கர் தெருவைச் சேர்ந்த சி.கிருஷ்ணன் மகள் டி.சுப்புலெட்சுமி, மதுரை கே.கே.நகர் ஏரிக்கரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மு.சீனிவாசன், மதுரை அரசரடி ஹார்விநகர் 4வது தெருவைச் சேர்ந்த எம்.சேகர் என்பவரின் மகள் எஸ்.மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவரும், ஒரு உறுப்பினராகவும் மகளிராகவும் உள்ளனர். அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அறங்காவலர்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். நியமனம் செய்யப்படும் அறங்காவலர்கள் பதவியேற்ற நாளிலிருந்து இரண்டு ஆண்டுகாலம் பதவி வகிப்பார்கள் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் ருக்மணி பழனிவேல்ராஜன், தற்போதைய தமிழக அரசில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ள பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயார் ஆவார். இவர் ஏற்கெனவே அறங்காவலர் உறுப்பினராக பதவி வகித்துள்ளார். மற்றொரு உறுப்பினர் எஸ்.மீனா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதியின் மனைவியாவார். மற்றொரு உறுப்பினர் பி.கே.எம்.செல்லையா மதுரையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனர் பி.கே.மூக்கன் அம்பலத்தில் மகனாவார். இவரும் ஏற்கெனவே இக்கோயிலில் அறங்காவலராக இருந்துள்ளார். மற்றொரு உறுப்பினரான மு.சீனிவாசன் மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையின் டாக்டராவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x