Published : 04 Mar 2024 04:02 PM
Last Updated : 04 Mar 2024 04:02 PM

இழப்பீட்டு தொகையை திருப்பி அளித்த மீனவரை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை தேவை: அண்ணாமலை

முதல்வரிடம் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையைப் பெறும் மீனவர் ரமேஷ் அதனை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரனிடம் திரும்பக் கொடுக்கிறார்

சென்னை: "திமுக அரசு வழங்குவதாகக் கூறிய இழப்பீடுத் தொகையைக் குறைவாகக் கொடுத்ததைக் கேள்வி கேட்ட மீனவர் மீது தாக்குதலும் நடத்தியிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து தமிழக மீனவ சமுதாய மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது திமுக. உடனடியாக, மீனவர் ரமேஷைத் தாக்கிய திமுக குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கு, தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற விழாவில், இழப்பீடாக வெறும் 2 லட்சத்துக்கான காசோலை மட்டுமே வழங்கியதால் மீனவப் பெருமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பூம்புகாரைச் சேர்ந்த மீனவர் ரமேஷ், விழா மேடையிலேயே முதல்வர் ஸ்டாலினிடம் இது குறித்துப் புகார் அளித்ததும், பின்னர், தனக்கு வழங்கப்பட்ட காசோலையை, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் மேடையிலேயே திருப்பிக் கொடுத்தததையும், விழா காணொளியில் காண முடிகிறது.

இதனை அடுத்து, மீனவர், ரமேஷை, அங்கேயிருந்த திமுகவினர் தாக்கியுள்ளதாகவும் இதனைப் பதிவு செய்த தனியார் செய்தித் தொலைக்காட்சியின் காணொளிகளும், திமுகவினரால் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்தியில், திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, தமிழக மீனவர்கள், இலங்கை அரசால் கொல்லப்படுவதைக் கண்டும் காணாமல் இருந்த திமுக, தற்போது, திமுக அரசு வழங்குவதாகக் கூறிய இழப்பீடுத் தொகையைக் குறைவாகக் கொடுத்ததைக் கேள்வி கேட்ட மீனவர் மீது தாக்குதலும் நடத்தியிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து தமிழக மீனவ சமுதாய மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது திமுக.

உடனடியாக, மீனவர் ரமேஷைத் தாக்கிய திமுக குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீனவ சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு வழங்குவதாக உறுதி அளித்த ரூ.5 லட்சம் இழப்பீடை வழங்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x