Published : 04 Mar 2024 03:29 PM
Last Updated : 04 Mar 2024 03:29 PM

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை விசாரிக்க அரசின் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை: காவல் துறை

செந்தில் பாலாஜி | கோப்புப்படம்

சென்னை: அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மோசடி செய்த வழக்கின் விசாரணை நடத்துவதற்கான தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என காவல் துறை கூறியதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 4-ம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்ட 47 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை எம்பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 30 தேதிக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து விசாரணை நடத்திய மத்திய குற்றபிரிவு போலீஸார், செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

அதில் அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேர் வரை குற்றபத்திரிகையில் குற்றவாளி என சேர்த்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட இன்னும் சிலரை விசாரிக்க அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் குற்றப்பத்திரிகையை ஏற்று வழக்கை நடத்துவதற்கான அனுமதி இன்னும் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என மீண்டும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஏப்ரல் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x