Published : 07 Feb 2018 11:19 AM
Last Updated : 07 Feb 2018 11:19 AM

பள்ளி மாணவர்களை காப்பாற்றிய துப்புரவு பணியாளருக்கு ஆட்சியர் பாராட்டு: குடிநீர்த் தொட்டியில் விஷம் கலந்திருந்ததை அறிந்து எச்சரித்தவர்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பள்ளி குடிநீர்த் தேக்கத் தொட்டியில் விஷம் கலக்கப்பட்டுள்ளதை உரிய நேரத்தில் கண்டறிந்து, மாணவர்களை காப்பாற்றிய துப்புரவு பணியாளருக்கு ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் நேற்று பாரட்டு தெரிவித்தார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மருதூர் வடக்கு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 40 மாணவர்கள் பயில்கின்றனர்.

இப்பள்ளி வளாகத்தில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தேக்கத் தொட்டி ஒன்று உள்ளது. பள்ளியில் கடந்த ஜன.25-ம் தேதி காலை துப்புரவு பணியை முடித்த பின்னர், தூய்மைப் பணியாளர் நாகம்மாள் கை கழுவுவதற்காக நீர்த் தேக்கத் தொட்டி அருகே சென்றுள்ளார். அப்போது, தொட்டியிலிருந்து ஒரு வித துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், தொட்டியைத் திறந்து பார்த்தபோது, அதில் இருந்த தண்ணீரின் நிறம் மாறியிருந்துள்ளது. ம

மேலும், அருகில் களைக்கொல்லி மருந்து டப்பா ஒன்று கிடந்ததால், தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதை உணர்ந்த நாகம்மாள், இதுகுறித்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பள்ளி குடிநீர்த் தேக்கத் தொட்டி நீரில் விஷம் கலந்திருப்பதை உரிய நேரத்தில் கண்டறிந்து, மாணவர்களுக்கு பாதிப்பு ஏதும் நிகழாதவாறு காப்பாற்றிய துப்புரவுப் பணியாளர் நாகம்மாளின் செயலை அறிந்த மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார், அவருக்கு நேற்று பாராட்டு தெரிவித்து, பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x