Published : 27 Feb 2024 05:41 AM
Last Updated : 27 Feb 2024 05:41 AM

ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற டிஜிபிக்கு அதிகாரம் இல்லை: உயர் நீதிமன்றம்

கோப்புப்படம்

சென்னை: ஒரு வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு, விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற டிஜிபி.க்கு அதிகாரம் கிடையாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் உள்ள தனியார் நிறுவன நிர்வாக இயக்குநரின் வீட்டின் முன்பாக சிசிடிவி கேமரா பொருத்தி அங்குள்ள பெண்கள் மற்றும் அங்கு நடந்த தனிப்பட்ட நிகழ்வுகளை மறைமுகமாக கண்காணித்ததாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் 2 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 2019-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த நிலையில், கடந்த 2021 ஜூன் 23 அன்று இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றியும், விசாரணை அதிகாரி ஒருவரை நியமித்தும் அப்போதைய டிஜிபி உத்தரவிட்டார்.

சிபிசிஐடி விசாரணை: அதன்படி இந்த வழக்கில் புதிதாக விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீஸார் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ககோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், சிபிசிஐடி போலீஸார் இதேசம்பவத்துக்கு தனியாக வழக்குப்பதிவு செய்து கடந்த 2023 ஜன.6அன்று மற்றொரு குற்றப்பத்தி ரிகையை எதிர்மறையாக அதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், இந்த குற்றச்சம்பவம் உண்மைக்குப் புறம்பானது எனக் கூறியிருந்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘‘ஒரே சம்பவத்துக்காக இரு விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தமுடியாது. இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த முன்னேற்றங்கள் போலீஸாருக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இடையே உள்ள இணக்கத்தை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, அதிர்ச்சியையும் ஏற்படுத்துகி்றது. ஒரு குற்ற வழக்கில் ஒரு அமைப்புதனது விசாரணையை முடித்துநீதிமன்றத்தில் குற்றப்பத்தி ரிகையை தாக்கல் செய்த பிறகுவிசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற டிஜிபிக்கு அதிகாரம் கிடையாது.

எனவே இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ள எதிர்மறையான குற்றப்பத்திரிகையை ரத்து செய்கிறேன். ரேஸ்கோர்ஸ் போலீஸார் தாக்கல் செய்துள்ள முந்தைய குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த வழக்கை 3 மாதங்களில் சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x