Last Updated : 20 Feb, 2024 09:17 PM

 

Published : 20 Feb 2024 09:17 PM
Last Updated : 20 Feb 2024 09:17 PM

“தனி சின்னத்தில் போட்டியிடுவதே மதிமுக விருப்பம்” - துரை வைகோ

திருநெல்வேலியில் மண்டல மதிமுக சார்பில் தேர்தல் நிதி மற்றும் வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோவிடம் நிதி அளிக்கப்பட்டது

திருநெல்வேலி: “தனி சின்னத்தில் போட்டியிடுவதே எங்கள் விருப்பம். தமிழகத்தில் எத்தனை தொகுதியில் போட்டி என்பதை முடிவு செய்த பின்னரே எந்தெந்த தொகுதி என்பதை அறிவிப்போம்” என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.

திருநெல்வேலியில் மண்டல மதிமுக சார்பில் தேர்தல் நிதி மற்றும் வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்ட மதிமுக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் நிதியாக ரூ.2.5 கோடி ரொக்க பணம் மற்றும் காசோலைகளை துரை வைகோவிடம் வழங்கினர். திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம் முதற்கட்ட நிதியாக ரூ.35 லட்சத்தை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் துரை வைகோ கூறியது: “பல்வேறு சிறப்பம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை மதிமுக வரவேற்கிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு தமிழகத்தை நடத்தி வருகிறது. கடுமையான நிதி நெருக்கடி மற்றும் மத்திய அரசின் குறுக்கீடு உள்ளிட்டவைகளை கடந்து தமிழக பட்ஜெட் சிறப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்காத காரணத்தால் மாநில அரசே நிதி ஒதுக்கி பல திட்டங்களை செயல்படுத்தும் நிலை உள்ளது.

மழை வெள்ளத்தால் தமிழகத்துக்கு ரூ.37 ஆயிரம் கோடி வரை நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக மின்வாரியம் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சவாலான இந்த நேரத்தில் சிறப்பான பட்ஜெட்டை தமிழக அரசு அறிவித்துள்ளதை எதிர்க்கட்சிகள் தவிர அனைவரும் பாராட்டி வருகின்றனர். மழை வெள்ள பாதிப்பு, ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பு, நிலுவைத் தொகை வராதது போன்றவை காரணமாகவே தமிழகத்தின் வருவாய் குறைந்துள்ளன. நிதி பற்றாக்குறை தமிழகத்தில் கட்டுக்குள்தான் உள்ளது. தமிழக முதல்வரின் சிறப்பான செயல்பாட்டால் 39 மக்களவை தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

விருதுநகர், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 4 மக்களவை தொகுதிகளிலும் மதிமுக போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள். எண்ணிக்கை முடிவான பின்னரே தொகுதி குறித்து மதிமுக அறிவிப்பு வெளியிடும். விருதுநகர் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்பது மதிமுக தொண்டர்கள் விருப்பமாக உள்ளது. கூட்டணி தலைவர்கள் எடுக்கும் முடிவை பொருத்து வேட்பாளர்கள் அறிவிப்பு இருக்கும்.

மதிமுக பம்பரம் சின்னத்தை இழந்துவிட்டது. குறுகிய காலத்தில் வேறு ஒரு சின்னத்தில் போட்டியிட்டு மக்களை சந்திக்க முடியாத நிலை இருந்ததால் மாற்று சின்னத்தில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டோம். தற்போது தனி சின்னத்தில் போட்டியிடுவதே எங்களது விருப்பம். இது குறித்து கூட்டணியும் கட்சித் தலைமையும் முடிவு செய்யும்.

இண்யா கூட்டணியில் இருந்து ஒரு சில கட்சிகள் மட்டுமே வெளியேறியுள்ளது. வலுவான நிலையிலேயே கூட்டணி உள்ளது. தொகுதி பங்கியீட்டை விரைவில் முடித்து இண்டியா கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். வாக்கு இயந்திரத்தை நம்பியே 370-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என பாஜக தலைவர்கள் கூறி வருகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x