Published : 13 Feb 2024 06:18 PM
Last Updated : 13 Feb 2024 06:18 PM

அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி

அமைச்சர் ஐ.பெரியசாமி | கோப்புப்படம்

சென்னை: வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டார். இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசிடம் ஊதியம் பெறுபவர் பொது ஊழியர் என்பதால் ஆளுநரிடம்தான், வழக்கு தொடர அனுமதி பெற வேண்டும். அமைச்சர்களை நியமிக்கவும், நீக்கவும் ஆளுநருக்குதான் அதிகாரம் உள்ளது. எனவே, வழக்குத் தொடர அவர்தான் அனுமதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத் துறை, 2023 ஜனவரியில் தாக்கல் செய்த பதில் மனுவில், விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், வழக்கில் சாட்சி விசாரணை துவங்கிய பின் இடையில் விடுவிக்க கோர முடியாது என்ற நிலைபாட்டையும் தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுப் பதிவுக்கு பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை நீதிமன்றம் விடுவிக்க முடியாது என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஏன் முறையான அனுமதியை ஆளுநரிடம் பெறவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேள்வி எழுப்பினார். இன்னும் காலம் கடந்து விடவில்லை. இனிமேலும் சென்று ஆளுநரின் அனுமதி பெறலாம். விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடின்மை காரணமாகவே தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வழக்கில் இருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உடனே, லஞ்ச ஒழிப்புத் துறை, உரிய ஆவணங்களுடன் ஆளுநரை அணுகி வழக்கு தொடர அனுமதி பெற்றிருக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றமும், ஆளுநரிடம் முறையாக அனுமதி பெற லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடவில்லை. வழக்கு நீண்ட தூரத்தை கடந்து விடவில்லை.

ஒரே ஒரு சாட்சி மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளதால், ஆளுநரிடம் அனுமதி பெறலாம். அமைச்சராக இருப்பவர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x