Published : 13 Feb 2024 05:42 PM
Last Updated : 13 Feb 2024 05:42 PM

“திருமணமான 3 மாதத்தில் பிரச்சினை” - தந்தையின் குற்றச்சாட்டும், ரவீந்திர ஜடேஜா பதிலும்

ஜாம்நகர்: இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா நடப்பு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் பங்கேற்றார். பின்னர், காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் பங்கேற்கவில்லை. அடுத்த மூன்று போட்டிகளில் உடற்தகுதியை ஜடேஜா அணியில் இடம்பிடிப்பார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வரும் ஜடேஜா, தற்போது குடும்ப பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகிறார் என்றால் மிகையல்ல. ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் சமீபத்தில் அளித்த பேட்டி அவரின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் குஜராத் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி: “நான் உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். ஜடேஜா மற்றும் அவரது மனைவி ரிவாபாவுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் தற்போது எந்தவித தொடர்பும் இல்லை. நாங்கள் அவர்கள் இருவரையும் தொடர்புகொள்வதில்லை. அவர்களும் எங்களை தொடர்புகொள்வதில்லை. நான் தற்போது ஜாம்நகரில் தனியாக வசிக்கிறேன். ஜடேஜாவும் இதே ஊரில்தான் தன்னுடைய பங்களாவில் வசிக்கிறார். ஆனால், இதுநாள் வரை ஜடேஜாவை இந்த நகரத்தில் பார்க்கவில்லை.

ஜடேஜா - ரிவாபா திருமணம் முடிந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு பிரச்சினை தொடங்கியது. திருமணம் ஆன மூன்று மாதத்திலேயே அனைத்து சொத்துகளையும் தன்னுடைய பெயரில் மாற்ற வேண்டும் எனச் சொல்லி ரிவாபா எங்கள் குடும்பத்தை பிரிந்துவிட்டார். ரிவாபாவுக்கு எங்கள் குடும்பத்துடன் வாழ பிடிக்கவில்லை. தனியாக வாழ வேண்டும் என ஆசைப்பட்டார்.

இந்த விஷயங்களை பற்றி நான் சொல்வதோ அல்லது ஜடேஜாவின் சகோதரி சொல்வதோ உண்மைக்கு புறம்பாகவோ அல்லது தவறாகவோ இருக்கலாம். ஆனால், எங்கள் குடும்பத்தில் உள்ள 50 பேரும் எவ்வாறு தவறாக இருக்கும் முடியும் என்பதே நீங்களே கூறுங்கள். ஆம், ஜடேஜா - ரிவாபா உடன் குடும்பத்தில் யாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வெறுப்பு மட்டுமே உள்ளது. இரண்டு குடும்பங்களுக்கு இடையே வெறுப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை.

நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. ஐந்து வருடங்களாக நாங்கள் எங்கள் பேத்தியின் (ஜடேஜா மகள்) முகத்தை கூட பார்க்கவில்லை. ஜடேஜா என் மகன். அதுதான் என் மனதில் நெருப்பாய் எரிகிறது. அவன் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தாலோ அல்லது கிரிக்கெட் வீரராக மாறாமல் இருந்திருந்தாலோ எல்லாம் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். ஜடேஜாவின் மாமியார் குடும்பம்தான் இப்போது அனைத்தையும் நிர்வகிக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றிலும் தலையிடுகிறார்கள்" என்று பரபரப்பான குற்றச்சாட்டை தனது மருமகள் மீது தெரிவித்தார் ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங்.

இந்தச் செய்தி வெளியானதும் குஜராத்தில் சலசலப்பை ஏற்படுத்த தவறவில்லை. ஜடேஜா 2016-ம் ஆண்டு ரிவாபாவை கரம்பிடித்தார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ரிவாபா தற்போது ஜாம்நகர் வடக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ. பாஜக சார்பில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ரிவாபா. இருவருமே பிரபலமாக இருப்பதால் ஜடேஜா தந்தையின் குற்றச்சாட்டு விவாதமாக எழுந்துள்ளது.

விவாதங்களுக்கு மத்தியில் தந்தையின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குஜராத்தி மொழியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், "சம்பந்தபட்ட நேர்காணலில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அர்த்தமற்றவை. அவை பொய்யானவை. அவற்றை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். இந்த நேர்காணல் ஒரு ஸ்கிரிப்ட்.

எம்எல்ஏவாக இருக்கும் என் மனைவியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாக இப்படி செய்துள்ளார்கள். இது முறையற்றது. கண்டிக்கத்தக்கது. இதை யாரும் நம்ப வேண்டாம். எனக்கும் இதுபோல் சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால், அந்த விஷயங்களை நான் பொதுவில் வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது" என்று அதில் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

ஜடேஜா தனது தந்தையின் குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், ஜாம்நகர் வடக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ரிவாபா இதே குற்றச்சாட்டு தொடர்பாக பொதுவெளியில் கேள்விகளை எதிர்கொண்டு வருகிறார். ஆனால், எந்தக் கேள்விக்கும் ரிவாபா நேரடியாக பதிலளிக்க மறுத்துவருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x