Published : 13 Feb 2024 05:40 AM
Last Updated : 13 Feb 2024 05:40 AM

கைதிகள் பற்கள் உடைப்பு வழக்கில் சிசிடிவி காட்சிகளை வழங்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அம்பை காவல் நிலையத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில், காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை மனுதாரரிடம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், அம்பையைச் சேர்ந்த அருண்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஒரு வழக்கு விசாரணைக்காக போலீஸார் என்னை அம்பை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் என்னை கடுமையாகத் தாக்கினர். ஏஎஸ்பி பல்வீர்சிங் எனது 4 பற்களை உடைத்தார். என்னைப்போல பல விசாரணைக் கைதிகளின் பற்களை ஏஎஸ்பி உடைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. எனவே, அம்பை காவல் நிலையத்தில் மார்ச் 10 முதல் 11-ம் தேதி வரையிலான சிசிடிவி கேமரா பதிவுகளை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஐ.ஜி. தரப்பில் எதிர்ப்பு... இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தென்மண்டல ஐ.ஜி. தரப்பில், "நெல்லை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் 213 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் பாதுகாக்கப்படுகின்றன. கேமராக்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதிசெய்ய ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தப்படுகிறது. எனவே, காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை மனுதாரருக்கு வழங்க முடியாது" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, அம்பை காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x