Published : 08 Feb 2018 07:20 AM
Last Updated : 08 Feb 2018 07:20 AM
சென்னையில் 4-வது மாடியில் இருந்து குதித்த இளைஞரால் படுகாயமடைந்த சிறுமியின் சிகிச்சைக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்கும் என்று பெற்றோரிடம் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உறுதியாக தெரிவித்தார்.
சென்னை தண்டையார்பேட்டை, ஸ்ரீராமுலு தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் தன்யஸ்ரீ(4). தாத்தா அருணகிரியுடன், தன்யஸ்ரீ கடந்த 28-ம் தேதி இரவு சஞ்சீவிராயன் தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு வீட்டின் 4 மாடியில் இருந்து சிவா என்ற இளைஞர் மது போதையில் கீழே குதித்தார். சாலையில் நடந்துசென்ற சிறுமி மீது இளைஞர் விழுந்தார். இதில் இளைஞரும், சிறுமியும் படுகாயம் அடைந்தனர்.
உயிருக்கு போராடிய சிறுமி, சென்னை அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவல் வாட்ஸ்அப், பேஸ்புக் மூலமாக பரவியது. ஏராளமானோர் சிறுமியின் சிகிச்சைக்கு தேவையான பண உதவிகளைச் செய்து வருகின்றனர்.
கடந்த 31-ம் தேதி மருத்துவமனைக்குச் சென்ற சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சிறுமியின் உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்தார். சிறுமியின் சிகிச்சைக்கு ஆகும் முழு செலவை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக அரசே ஏற்கும் என பெற்றோரிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சிறுமியின் உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவ சிகிச்சைக்கு உதவிய அரசுக்கு சிறுமியின் பெற்றோர் நன்றி கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT