Last Updated : 22 Jan, 2024 07:29 PM

1  

Published : 22 Jan 2024 07:29 PM
Last Updated : 22 Jan 2024 07:29 PM

அறக்கட்டளை நிர்வாகிக்கு முன்ஜாமீன் மறுப்பு: தற்காலிக ஆசிரியர் நியமன மோசடி புகாரை பள்ளிக் கல்வி இயக்குநர் விசாரிக்க உத்தரவு 

மதுரை: தென் மாவட்டங்களில் நடைபெற்ற தற்காலிக ஆசிரியர் நியமன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் அறக்கட்டளை நிர்வாகியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, மோசடி குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த பாலகுமரேசன். இவர் ஆதவா அறக்கட்டளை நடத்தி வந்தார். அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனம் தொடர்பாக அரசும், அறக்கட்டளை இடையே ஒப்பந்தம் போட்டிருப்பதாக கூறி, பலரிடம் ரூ.3 முதல் ரூ.5 லட்சம் வரை பணம் வசூலித்து மோசடி செய்ததாக சண்முக லெட்சுமி என்பவர் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரில் தற்காலிக ஆசிரியர் பணி வழங்குவதாக ரூ.5 லட்சம் வாங்கினர். அதன் பிறகு ஓட்டப்பிடாரம் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக நியமித்தனர். ஆனால் சம்பளம் வரவில்லை. நேரில் பார்த்து கேட்டும் சம்பளம் தரவில்லை. என்னைப்போல் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளனர் எனக் கூறப்பட்டிருந்தது. இப்புகாரின் போலீஸார் பாலகுமரேசன், பிரசாத், குணம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பாலகுமரேசன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், 'மாவட்டங்களில் அரசு பள்ளி கட்டிடங்களை பராமரிக்கவும், தற்காலிக ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனம் தொடர்பாக அரசுக்கும் ஆதவா அறக்கட்டளைக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மனுதாரருக்கு மாதச்சம்பளம் வழங்கப்பட்டது. பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சம்பளம் வழங்கவில்லை. அரசிடம் இருந்து நிதியும் வரவில்லை. இதனால் முன்ஜாமீன் வழங்க வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் கூடுதல் வழக்கறிஞர் நம்பிசெல்வன் வாதிட்டார். பின்னர் நீதிபதி, ''மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரரை போலீஸார் கைது செய்ய வேண்டும். இந்த மோசடியில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. இதனால் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனைத்து தரப்பினருக்கும் உரிய வாய்ப்பு வழங்கி மோசடி குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x