Published : 22 Jan 2024 04:25 PM
Last Updated : 22 Jan 2024 04:25 PM

கோவை தர்மலிங்கேஸ்வரர் கோயில் அறங்காவலர் இடைநீக்க விவகாரம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் தடை

சென்னை: கோவை மாவட்டம் மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயில் வாழ்நாள் அறங்காவலருக்கு எதிரான நடவடிக்கையில் நீதிமன்ற அனுமதியின்றி எந்த ஒரு பாதமான இறுதி முடிவும் எடுக்க தமிழக இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வாழ்நாள் அறங்காவலராக பணியாற்றிய கிருஷ்ணசாமி என்பவரை நிர்வாக குறைபாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இடை நீக்கம் செய்து கோவை மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜனவரி 3-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரியும், உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் கோரியும் கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கோயிலை நிறுவிய பரம்பரை அறங்காவலரான மறைந்த மந்தன நரசிம்ம ராஜு, கடந்த 1985-ம் ஆண்டு தன்னுடன் சேர்த்து ஐந்து வாழ்நாள் அறங்காவலர்களை நியமித்தார். கடந்த 40 ஆண்டுகளில் அறங்காவலர்களின் சொந்த நிதியில், கிணறு தோண்டி, குழாய் இணைப்புகள் கொடுத்து, மின் விளக்குகள் பொருத்தி, கோயிலை ஒட்டியுள்ள மலைக்கு செல்ல நடைபாதை அமைத்து, அன்னதான மண்டபம் அமைத்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கோயிலின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தேன்.

கடந்த 1999 - 2022ம் ஆண்டுகளுக்கு இடையில் மற்ற நான்கு அறங்காவலர்கள் மரணமடைந்து விட்டனர். சமூகத்தில் நன்மதிப்பை பெற்ற, நான்கு பக்தர்களை அறங்காவலர்களாக நியமிக்கும்படி, கோவை மாவட்ட இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையருக்கு கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் கடிதம் அனுப்பினேன். இதற்கிடையில், இணை ஆணையரின் பரிந்துரையை ஏற்று, கோயிலுக்கு செயல் அலுவலரை நியமித்து அறநிலையத் துறை ஆணையர், 2023, அக்டோபரில் உத்தரவு பிறப்பித்தார். அதற்கு எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.

இருப்பினும், நான்கு வாழ்நாள் அறங்காவலர்களை நியமிக்கக் கோரிய தனது பரிந்துரை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது, இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து நடவடிக்கை துவங்கியுள்ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்ததை ஏற்று வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. மேலும், தனக்கு வயதாகி விட்டதாலும், வாழ்நாள் அறங்காவலர்களை நியமிக்கும் வரை, கோயிலுக்கு மண்டபம் கட்டிக்கொடுத்தது போன்ற காரியங்களைச் செய்த கண்ணன் என்பவரை தற்காலிக அறங்காவலராக செயல்படும்படி கூறினேன். அதை ஏற்று அவரும் தற்காலிக அறங்காவலராக செயல்பட்டு வந்ததார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சித்ரா பவுர்ணமி விழா குறித்து விவாதிக்க நடந்த கூட்டத்தில் மற்ற உறுப்பினர்கள், கோயில் வரவு செலவு விவரங்களைக் கேட்ட போது, கண்ணன் அவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டியதால், அவரை பதவியில் இருந்து நீக்கினேன். இதற்கு பழிவாங்கும் வகையில், எந்த ஆதாரங்களும் இல்லாமல் கோயில் அறங்காவலர்களுக்கு எதிராக கண்ணன், அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், தனக்கும், பிற அறங்காவலர்களுக்கும் எதிராக அறநிலையத் துறையில் புகார் அளித்த கண்ணன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சாதகமான உத்தரவு பெற்றார். அந்த உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோயிலுக்கு நன்கொடை என்ற பெயரில் சட்டவிரோதமாக பணம் வசூலித்தும், கோயில் கணக்கு வழக்குகளை முறையாக கையாளவில்லை என்றும் கண்ணனுக்கு எதிராக அளித்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனிடையே, கோயிலை முறையாக நிர்வகிக்கவில்லை என கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் அறநிலைய துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தனர். விசாரணைக்கு ஆஜராகி இந்த பொய் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளித்தேன். ஆனாலும், தன்னை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். ஆதாரங்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்காமல் பிறப்பிக்கப்பட்ட இடைநீக்க உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்ஆஜரான மூத்த வழக்கறிஞர் அப்துல்சலீம் , "இந்து சமய அறநிலையத் துறை முழுமையாத ஆராயாமல், கவனத்தை செலுத்தாமல் இடை நீக்க உத்தரவை பிறப்பித்துள்ளது", என்று வாதிட்டார்.அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் அருண்நடராஜன், "அறங்காவலர்கள் இறந்ததை தெரிவிக்கவில்லை. நன்கொடை சீட்டுகள் அடித்ததில் முறையான அனுமதி பெறவில்லை" என்று வாதிட்டார்.

இருதரப்பு வாகனங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் உரிய விளக்கத்தை இந்துசமய அறநிலைத்துறையிடம் தெரிவிக்க வேண்டும். அதை அறநிலையத் துறை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மனுதாரருக்கு எதிராக எந்த ஒரு பாதகமான இறுதி நடவடிக்கைகளையும் நீதிமன்ற அனுமதியின்றி எடுக்க கூடாது என உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x