Published : 04 Jan 2024 03:24 PM
Last Updated : 04 Jan 2024 03:24 PM

சர்வர் பிரச்சினையால் கருவூலத்துறை இணையதளம் முடக்கம்: பத்திர பதிவு, அரசு ஊழியர் ஊதியம், ஓய்வூதிய சேவை பாதிப்பு

தாம்பரம்: கருவூலத் துறை இணையதளம் சரிவர இயங்காததால் முத்திரைத்தாள் முகவர்கள், கருவூலத்துறை அலுவலகங்களில் பணிபுரிவோர், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். தமிழக அரசின் பதிவுத்துறை இணையதளத்தை டி.சி.எஸ். நிறுவனம் பராமரிப்பது போன்று, தமிழ்நாடு கணக்கு மற்றும், கருவூலத் துறை இணையதளத்தை விப்ரோ நிறுவனம் பராமரித்து வருகிறது. சரியான முறையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்படாததால், தொடங்கியதில் இருந்தே கருவூலத் துறை ஊழியர்கள் பெரும் சிரமத்துடனே இந்த தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த இணையதளம் அடிக்கடி முடங்கிப்போய் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களுக்கு ஊதிய விகிதம் மாற்றம் செய்யப்படுதல், அகவிலைப்படி உயர்த்துதல், ஓய்வூதியத் தொகையை உயர்த்தி வழங்குதல் போன்ற அறிவிப்புகள் அரசால் செய்யப்படும்போது, இந்த இணையதளம் மொத்தமாக முடங்கி விடுகிறது. இதன் காரணமாக அரசுத்துறை அலுவலர்களும், ஓய்வூதியதாரர்களும் கருவூலங்களுக்கு நடையாய் நடக்கின்றனர்.

இதனிடையே கடந்த சில மாதங்களாக இணையதள பராமரிப்பு என்ற பெயரில், நிதித்துறை, உயர் நீதிமன்றம், நிதி நிலை அறிக்கை தயாரிப்பு பணிகளுக்கு மட்டும் இந்த இணையதளம் முழுமையாக இயங்கும் என்றும், மற்ற துறைகளுக்கு என தனித்தனியாக நேர ஒதுக்கீடு (டைம் ஸ்லாட்) செய்யப்பட்டு அந்த நேரத்தில்தான் இணையதளத்தின் உள்ளே செல்ல முடியும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி சென்னை மற்றும், திருச்சி மண்டலங்களுக்கு ஒரு நேரமும், வேலூர், கோயம்புத்தூர் மண்டலங்களுக்கு ஒரு நேரமும், மதுரை, திருநெல்வேலி மண்டலங்களுக்கு ஒரு நேரமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இப்படி குறிப்பிட்ட நேரத்தில்தான் இணையதளத்தின் உள்ளே நுழைந்து பணியாற்ற முடியும் எனில், அந்த திட்டமே தோல்விதான் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அனைத்து பயனர்களும் இணையத்தில் உள்நுழைந்து தங்கள் பணிகளை மேற்கொள்ள, இரவு 7 மணி முதல் 10 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த அரசு அலுவலகமும் இயங்காது என்பது, இணையதளத்தை பராமரிக்கும் மென்பொருள் நிறுவனத்துக்கு தெரியாதா என பயனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

முத்திரைத் தாள் வாங்க ஆன்லைனில் பணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கும் சர்வர் கோளாறு என காரணமாக கூறப்படுகிறது. மீண்டும் முயன்றால் முத்திரைத்தாள் ஸ்டாக் இல்லை என்று காட்டுவதாக, முத்திரைத்தாள் விற்பனை முகவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் முத்திரைத் தாள்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மென்பொருளின் வெர்ஷனை தரம் உயர்த்த உள்ளதால் கடந்த ஜனவரி 1 வரை இணையதளம் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கணக்கு மற்றும் கருவூலத்துறை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் தொடர்ந்து கடும் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து அரசு ஊழியர் ஒருவர் கூறும்போது, "இணையதளம் முறையாக இயங்கினால்தான் அரசு அலுவலகப் பணிகள் முழுமையான காலத்தில் முடிக்கப்படும். பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் தொடர்ந்து பணியாற்றமுடியும். எனவே கருவூலத் துறை இணையதளத்தை சீராக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து வழக்கறிஞர் டி.கஸ்தூரி கூறியது: பத்திரப்பதிவு துறையில் முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவுகள் கூடுதலாக இருக்கும். முன்பதிவு டோக்கன்கள் தீர்ந்துவிட்டால் தட்கல் முறையில் கட்டணம் செலுத்தி பதியலாம். சில நேரங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்க திடீர் அறிவிப்பு வரும்.

அந்த நேரங்களில் ரூ.5000 கொடுத்து தட்கல் டோக்கன்கள் எடுத்த பொதுமக்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். இப்படி தமிழகம் முழுவதும் மொத்தமாக பத்திரப்பதிவுக்கு உள்ளீடு செய்யும்போது சர்வர் முடங்கும் சூழல் ஏற்படுகிறது. இதுமட்டும் இல்லாமல் பத்திரப்பதிவுக்கு வங்கிகளில் பணம் செலுத்திய பின்னர், கருவூல சாப்ட்வேர் வேலை செய்யாமல் பணம் நிலுவை காட்டுகிறது.

இதனால் பல லட்சக்கணக்கான ரூபாய் செலுத்தும் பொதுமக்கள் நிலைகுலைந்து போகின்றனர். இதனால் நினைத்த நாளில் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் போகிறது. இதற்கு சரியான தீர்வு கிடைக்காததால் பொதுமக்கள், ஊழியர்கள், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

எனவே நிர்வாக வசதிக்காக சாப்ட்வேர் இணைப்புகள் மாவட்ட வாரியாக பிரிக்க வேண்டும். பதிவுகளுக்கு பின் அவற்றை மாநிலஅளவில் ஒருங்கிணைக்கலாம். துறையில் இருந்து வருவாய் பெறுவது மட்டுமல்லாமல் உரிய வசதிகளையும் செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x