Published : 24 Dec 2023 07:02 PM
Last Updated : 24 Dec 2023 07:02 PM

தென் மாவட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையை ரூ.15,000-ஆக உயர்த்தி வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: "கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு தற்போது திமுக அரசு அறிவித்துள்ள 6,000 ரூபாய் நிவாரணத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே, இதை, 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் மிக்ஜாம் புயலின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததன் காரணமாக கனமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. நிவாரணப் பணிகளும் காலதாமதமாக திட்டமிடல் இன்றி மூன்று நாட்கள் கழித்துதான் துவங்கப்பட்டன. குறிப்பாக, வடசென்னை கடற்கரைப் பகுதியில் கச்சா எண்ணெய் கழிவுகள் கலந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. அந்த பாதிப்புகளை அப்புறப்படுத்த, தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்நவீன காலத்திலும் தடுமாறியது இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசு.

மிக்ஜாம் புயல் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை எப்படி கையாள்வது என்ற படிப்பினையை பாடமாக எடுத்துக்கொண்டு, தென் மாவட்டங்களுக்கான கனமழை எச்சரிக்கையின்போது திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், திமுக அரசு இந்திய வானிலை ஆய்வு மையத்தை குறை கூறிக்கொண்டு பாதிக்கப்பட்ட நான்கு தென்மாவட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் தேவையான உதவிகளை செய்யாமல் தட்டிக் கழிப்பது வேதனை அளிக்கிறது.

ஒரு மாநில அரசு, இயற்கை சீற்றம் என்றால் எதற்கும் தயார் நிலையில் அரசு இயந்திரங்களை வைத்திருக்க வேண்டும். கடுமையான மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் அரசு நிர்வாகம், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நேரடியாக ஆறுதல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிவாரணத்தின்போது மாநில அரசு நிர்வாகம் உடனடியாக தன் சொந்த நிதியைப் பயன்படுத்தி நிவாரணப் பணிகளை தொடங்க வேண்டும்.

கடந்தவாரம் பெய்த கனமழையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டபோது, திமுக அரசின் முதல்வரோ மக்கள் மீது சிறிதும் அக்கறையின்றி, தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்காக டெல்லிக்குச் சென்றுவிட்டார். கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பற்றி அறிந்தவுடன் டிச.19ம் தேதியன்று நான் நேரடியாக கட்சி நிர்வாகிகளுடனும், மாவட்டக் கழக நிர்வாகிகளுடனும் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினேன். தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

தென் மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தால் தங்களது உடைமைகள் மற்றும் வாகனங்களை இழந்துள்ளனர். வியாபாரிகள் கடைகளில் உள்ள விற்பனைப் பொருட்கள் மற்றும் கணினி, மின்சாதனப் பொருட்கள் என்று அனைத்தையும் இழந்துள்ளனர். கனமழையால் நெல், வாழை, வெற்றிலைக் கொடி போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். தாங்கள் வளர்த்துவந்த கோழிகள் மற்றும் கால்நடைகளை இழந்துள்ளனர். கடற்கரை ஓரங்களில் உள்ள உப்பளங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி நூறு சதவீதம் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. கடைவீதியில் உள்ள கடைகளில் இருந்த யூரியா, காம்ப்ளக்ஸ் உரமூட்டைகள், அரிசி, நெல் மூட்டைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகவும், தாலுக்கா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம் உட்பட அரசு அலுவலகங்கள் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கி ஏரல் நகரமே முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்துள்ள மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடியில் ஏழு நாட்கள் ஆகியும் இன்னும் தண்ணீர் வடியாததால் பல பகுதிகளில் தேங்கிய மழை நீரில் கால்நடைகள் இறந்து மிதக்கின்றன. இதனால், கடும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், தேங்கிய வெள்ள நீரை அப்புறப்படுத்த பிற மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள ராட்சத மோட்டார்களை உடனடியாகக் கொண்டு சென்று தேங்கிய வெள்ள நீரை அகற்ற வேண்டும். இல்லையெனில் நோய்த் தொற்று உருவாகும் அபாயம் உள்ளது என்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

இவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு தற்போது திமுக அரசு அறிவித்துள்ள 6,000 ரூபாய் நிவாரணத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே, இதை, 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், விளை நிலங்கள், வணிக நிறுவனங்கள், உப்பளங்கள், பாதிக்கப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர மற்றும் சரக்கு வாகனங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு உரியவர்களுக்கு நிவாரணம் அளிப்பதுடன், மீண்டும் அவர்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்குமாறும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை நிவாரணமாக வழங்க, அரசு கொண்டுவரும் வாகனங்களை ஆங்காங்கே மறித்து பொருட்களை எடுத்துச் செல்லும் நிலைமை உருவாகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதை தவிர்ப்பதற்கு அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை நிவாரணமாக, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், விடுபடாமல் வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைக் கழிவுகள், இறந்த கால்நடைகள் போன்றவற்றை உரிய முறையில் அகற்றி, நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்கு ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி, சுகாதாரப் பணிகளை உடனடியாக துவங்கிட திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x