Published : 19 Dec 2023 09:30 AM
Last Updated : 19 Dec 2023 09:30 AM

நாடாளுமன்ற தேர்தலை கூட்டணியுடன் சந்திப்போம்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை கூட்டணியுடன் எதிர்கொள்வோம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்ந்த தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை எழுப்பூரில் நடைபெற்றது. ‘அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு’, என்ற பெயரில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகரன், வைத்திலிங்கம், புகழேந்தி, மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள், மகளிர் அணியினர் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு எப்போதும் இல்லை. தனிக்கட்சி தொடங்கினால் சட்ட சிக்கல் ஏற்படும் என்பதால் தான், ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’, என்ற பெயரில் அமைப்பாக தற்காலிகமாக செயல்படுகிறோம். ஜன. 6-ல் கோவையில் நடைபெற இருந்த மாநாடு தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்படுகிறது.

முதல் தர்மயுத்தம் ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்ற தொடங்கினோம். தற்போது, நாம் 2-வது தர்மயுத்தத்தை நடத்தி கொண்டிருக்கிறோம். கட்சி உடைந்துவிடும் என்பதால் தான், கட்சியில் இருந்து விலகாமல் பொறுமையாக இருந்தேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, ‘மக்களவைத் தேர்தலுக்காக 15 நாட்களுக்குக்குள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பறிக்கப்பட்டுள்ள தொண்டர்களின் உரிமையை மீட்க உரிமை மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை கூட்டணியுடன் எதிர்கொள்வோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x