Published : 01 Dec 2023 05:45 AM
Last Updated : 01 Dec 2023 05:45 AM

மழைநீரை அகற்ற இரவு பகலாக பணி: சென்னை மாநகராட்சிக்கு அண்ணாமலை பாராட்டு

வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று வழிபாடு நடத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

நாகப்பட்டினம்: தமிழகம் முழுவதும் ‘என் மண், என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திருவாரூர் மாவட்டத்தில் இருந்து நாகை மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் வந்தார்.

இந்நிலையில், தொடர் மழைமற்றும் புயல் அறிவிப்பு காரணமாக வரும் 5-ம் தேதி வரை நடைபயணம் தள்ளிவைக்கப்படுவதாக பாஜகசார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, வேளாங்கண்ணியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அண்ணாமலை, நேற்று வேளாங்கண்ணி பேராலயம் சென்று வழிபாடு நடத்தினார். பின்னர், நாகை அருகேயுள்ள கோரக்கர் சித்தர் கோயிலுக்குச் சென்று தியானம் செய்த அவர், தொடர்ந்து காரைக்கால் புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: சென்னையில் கனமழையால் பலஇடங்களில் தண்ணீர் தேங்கி,மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மழைநீரை அகற்றும் பணியில், சென்னை மாநகராட்சியின் ஊழியர்கள், அதிகாரிகள் இரவு, பகல் பாராது கடுமையாக உழைக்கின்றனர். அவர்களைப் பாராட்டுகிறேன்.

அதேநேரத்தில், சென்னையில் சிறிய மழைக்குக்கூட தண்ணீர் தேங்குவது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. சென்னையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க,சர்வதேச அளவிலான தொழில்நுட்பம் தெரிந்த பொறியாளர்களைக் கொண்டு, சிறப்பான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x