Published : 18 Nov 2023 06:16 AM
Last Updated : 18 Nov 2023 06:16 AM

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து முதல்வருக்கு 16 தொழிற்சங்கங்கள் கடிதம்

சென்னை: போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 16 சங்கங்கள் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கடந்த 1972-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போக்குவரத்துக் கழகங்கள் தமிழக மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவையை வழங்கி வருகின்றன.இவற்றின் நிதி நெருக்கடியை தீர்க்க வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையைவழங்குவது தொடர்பான அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது சுமார் 90 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

அவர்களுக்கு 2015-ம் ஆண்டுக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. மேலும், மின்வாரிய ஊழியர்களைப் போல ஒப்பந்தப் பலன்களை வழங்கி ஓய்வூதியமும் உயர்த்தப்படவில்லை. அதேசமயம், அகவிலைப்படி உயர்வுவழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, போக்குவரத்துக் கழகங்கள் மேல்முறையீடு செய்துள்ளன. இது நியாயமற்றது. போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களில் 26 ஆயிரம் பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். அரசுத் துறையில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து ஓய்வுபெற்றுவயது முதிர்ந்த காலத்தில் கடும்துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பிற துறை ஊழியர்களைப் போல போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும். அவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சட்டப்படியும் தேர்தல் வாக்குறுதிப்படியும் 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதிக்குப் பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். போக்குவரத்து ஊழியர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த நிலையில், ஊதிய பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்ட அறிவிப்பு: இதற்கிடையே சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில், போக்குவரத்துக் கழக தலைமையகங்கள் முன் வரும் 23-ம்தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடர் முழக்க போராட்டம் நடத்துவது எனவும், சென்னை பல்லவன் இல்லத்தில் வரும் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x