Published : 18 Nov 2023 05:59 AM
Last Updated : 18 Nov 2023 05:59 AM

வெயிட்டிங் லிஸ்ட் பிரச்சினையை தீர்க்க 5 ஆண்டுகளில் கூடுதலாக 3,000 ரயில்கள்: மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கூடுதலாக 3 ஆயிரம் ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தியாவில் ஆண்டுக்கு 800 கோடி பயணிகள் ரயிலில்பயணிக்கின்றனர். இந்த எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்சமயம், 10,748 எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ரயில்களில் முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் காத்திருப்போர் பட்டியலில் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிற சூழலில், கூடுதல் ரயில்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. இதனால்,அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் கூடுதலாக 3 ஆயிரம் ரயில்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வர மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேருந்துகளில் கட்டணம் அதிகமாக உள்ள நிலையில், மக்கள் ரயில்களில் பயணம் செய்வது அதிகரித்துள்ளது. இதனால், ரயில் டிக்கெட்டுகளுக்கு கடும்போட்டி நிலவுகிறது. இந்நிலையில் கூடுதல் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்பட்சத்தில், டிக்கெட்உறுதியாகாமல் வெயிட்டிங்லிஸ்டில் இருக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “ரயில்வே கட்டமைப்பை நவீனப்படுத்த மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்கள், நவீன படுக்கை வசதிகொண்ட ரயில்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறோம். ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் ரயில்களை பயன்பாட்டுக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். பயண நேரத்தை குறைக்கும் கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம். ஆண்டுக்கு 5,000 கிமீ ரயில் பாதை அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x