Published : 26 Jan 2018 11:45 AM
Last Updated : 26 Jan 2018 11:45 AM

பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் தொடர் போராட்டம்: பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெறாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பாமக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அக்கட்சியின் இளைஞர் அணித் தலை வர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: டீசல் விலை உயர்வு, பணியாளர்களின் ஊதியம் ஆகியவற்றை காரணம் காட்டி பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த 2001-ம் ஆண்டிலிருந்து 3 முறை பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டபோதும், போக்குவரத்துக்கழகம் நஷ்டத்தில்தான் இயங்கி வருகிறது. பேருந்து சேவையை அரசு வணிக நோக்கில் பார்க்கக்கூடாது.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட வந்துள்ளதை வரவேற்கிறோம். கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட் டால் பாமக சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். அதேபோல, யார் தலைமையிலும் இல்லாமல் அனைத்து கட்சிகளும் சேர்ந்து போராட முடிவெடுத்து, அழைப்பு விடுக்கப்பட்டால் அந்த போராட்டத்தில் பாமக பங்கேற்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க அவற்றை ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டுவர மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பல்லாவரத்தில்..

பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும், திரும்ப பெறக்கோரி பாமக சார்பில், பல்லாவரம் மற்றும் பள்ளிக்கரணையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பல்லாவரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை பொது செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் காஞ்சி வடக்கு மாவட்ட துணைத் தலைவர் பட்டு பாண்டியன், அமைப்புச் செயலாளர் முரசு ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் இளங்கோ, மாவட்ட துணை செயலாளர் பூக்கடை முனுசாமி பங்கேற்றனர்.

பள்ளிக்கரணையில்...

பள்ளிக்கரணையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் தலைமை தாங்கினார். இதில் காஞ்சி கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் சதாசிவம், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் ராம்குமார், பகுதிச் செயலாளர் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் குபேந்திரன் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x