Published : 05 Oct 2023 06:03 AM
Last Updated : 05 Oct 2023 06:03 AM

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

கோப்புப்படம்

சென்னை: சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு சட்ட பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரான எம்.முனுசாமி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகளைச் சேர்ந்த சமூகத்தினர் வசிக்கின்றனர். குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களும், வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களும் அதிகமாக உள்ளனர்.

சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் அரசின் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் அனைவருக்கும் சமமாக சென்றடையும். பட்டியலின, பழங்குடியின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

எனவே சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழக அரசுக்கு அளித்துள்ள மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், எந்த அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அரசின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.

எனவே சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி மனுதாரரின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக மனுதாரர் தமிழக அரசை மீண்டும் அணுகும்படி அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

எந்த அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அரசின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x