Published : 29 Aug 2023 01:34 PM
Last Updated : 29 Aug 2023 01:34 PM

காவிரியில் 24,000 கன அடி தண்ணீர் திறக்க வலியுறுத்தப்படும்: அமைச்சர் துரைமுருகன் உறுதி

அமைச்சர் துரைமுருகன் | கோப்புப்படம்

சென்னை: காவிரியில் விநாடிக்கு 24,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிடக் கோரி காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "காவிரி ஒழுங்காற்று குழுவிடம், விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடி, வீதம் 10 நாட்களுக்கு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்தோம். ஆனால், அந்தக் குழு, 15 நாட்களுக்கு 5000 கனஅடி தண்ணீர் திறக்க சிபாரிசு செய்திருக்கிறது.

அதுபோதுமானது அல்ல என்பது நம்முடைய நிலைப்பாடு. எனவே, இன்று பகல் 2.30 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில், தமிழக நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். அவர்களிடம் தமிழகத்தின் கோரிக்கையை வற்புறுத்தும்படி கோரியிருக்கிறேன்.

தண்ணீர் திறப்பு 24,000 கன அடியாக இருந்தால்தான், பயிர்கள் கருகாமல் இருக்கும் என்பதை, அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். எனவே, இன்றைய கூட்டத்தில் அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைப்பார்கள்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, டெல்லியில் உள்ள நீர்வள அமைச்சகத்தில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநில அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

அப்போது, தமிழக நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா, ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஆகஸ்டில் வழங்க வேண்டிய நீரில் இன்னும் 54 டிஎம்சி வழங்கப்படவில்லை. இதனால், தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்’’ என்று கோரினார். அதற்கு கர்நாடக அரசு அதிகாரிகள், ‘‘அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் அவ்வளவு நீர் திறக்க முடியாது’’ என்றனர்.

கூட்டத்தின் நிறைவில் காவிரி ஒழுங்காற்று குழு, தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் நீர் திறக்குமாறு கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x