Published : 24 Aug 2023 02:19 PM
Last Updated : 24 Aug 2023 02:19 PM

ஆதியோகி சிலை, கட்டிடங்களுக்கு முன் அனுமதி பெறவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

கோப்புப்படம்

சென்னை: கோவை ஈஷா யோகா ஃபவுண்டேஷனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கட்டிடங்களைக் கட்டுவதற்காக முன் அனுமதியோ, தடையில்லா சான்றிதழோ பெறவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோவை வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017ல் தொடர்ந்திருந்த வழக்கில், "மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும், வன விலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதைச் சுற்றி பல்வேறு கட்டிடங்களும் கட்டப்பட்டு உள்ளன. மேலும், அந்த வனப்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, இந்நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இதுதொடர்பாக, 2017-ல் தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "ஈஷா மையத்தில் 109 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் விதிமீறி கட்டப்பட்ட ஆதியோகி சிலை உள்ளிட்ட கட்டிட பணிகளை நிறுத்துவதற்கான உத்தரவும், மூடி சீல் வைப்பதற்கான உத்தரவும் கடந்த 2012-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஈஷா யோகா மையம் சார்பில் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆதியோகி சிலை அமைக்கப்பட்டதற்கான நோக்கம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டிருந்தது" என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை தரப்பில், "திட்ட அனுமதி அல்லது கட்டுமான அனுமதி வழங்கியது தொடர்பான எந்த ஆவணங்களும் எங்கள் அலுவலகத்திலோ அல்லது இக்கரை பூலுவம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திலோ இல்லை. வழிபாட்டுத் தலத்துக்கான, மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழலுக்கான மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ், மலை இடர் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து பெறப்படும் சான்றிதழ் என எதுவுமே ஈஷா யோகா அறக்கட்டளையால் பெறப்படவில்லை. பட்டியலில் தரப்பட்டுள்ள நிலத்தில் அரசு புறம்போக்கு நிலமும் உள்ளது. ஈஷா ஃபவுண்டேஷனுக்கு கட்டிடம் கட்ட அனுமதியோ, தடையில்லா சான்றோ ஈஷா ஃபவுண்டேஷன் நிர்வாகி பெறவில்லை. அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை" என்றும் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆர்.அனிதா அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரரும், ஈஷா அறக்கட்டளை தரப்பும் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை கோவை நகர திட்ட இணை இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும். அதில் சம்பந்தப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை என்று தெரியவந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x