Published : 10 Dec 2017 11:00 AM
Last Updated : 10 Dec 2017 11:00 AM
அதிமுகவை மீட்டெடுக்கவும் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வரவும் குக்கர் சின்னத்தில் வாக்களிக்குமாறு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பிரசாரத்தைத் தொடங்கி தினகரன் பேசியதாவது:
இந்தத் தேர்தலில் நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்வதன் மூலம் இரட்டை இலை சின்னத்தை திரும்பப் பெற முடியும். அம்மாவின் ஆட்சி என சொல்லிக் கொண்டு அம்மாவின் பாதையில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்று மக்கள் விரோத ஆட்சி செய்கின்றனர். முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த எந்த திட்டத்தையும் இத்தொகுதி மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் சரிவர நிறைவேற்றவில்லை. அதனால்தான் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள்.
தன்னிச்சையாக செயல்பட்டதால்தான் தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டிருக்கிறார். அவர் தொடர்ந்திருந்தால் இந்த ஆட்சியின் எடுபிடியாக செயல்பட்டிருப்பார். சாதாரணமாக அமைச்சருக்கு தனி உதவியாளராக செயல்பட்ட சேகர் ரெட்டியை ஒப்பந்ததாரராக உருவாக்கிய பெருமை ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் உண்டு. அவர் வீட்டில் வருமான வரிச்சோதனை நடந்து ஓராண்டு ஆகிறது. அதுதொடர்பாக பல பெயர்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து திறந்த வேனில் வாக்கு சேகரித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT