Published : 24 Nov 2017 09:23 AM
Last Updated : 24 Nov 2017 09:23 AM

காஞ்சி நகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை: 5 மணி நேர சோதனையில் பல ஆவணங்களை கைப்பற்றினர்

காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் சர்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் பல ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக கடந்த 2014-15ம் ஆண்டில் 9 மாதங்கள் பணியாற்றியவர் சர்தார். பின்னர் அவர் ஊட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு சில நாட்கள் பணியாற்றிய பிறகு, கோவில்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு பணியாற்றினார். பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார். இவர் ஒப்பந்தப் பணிகளின் போது கெடுபிடிகள் காட்டுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்தக் கெடுபிடிகள் பணியின் தரத்தை உயர்த்துவதற்காக காட்டப்படுவதில்லை என்றும், கூடு தல் கமிஷன் தொகை பெறுவதற்காக காட்டப்படுவதாகவும் ஒப்பந்ததாரர்கள் புகார் கூறி வந்தனர்.

முகாம் அலுவலகம்

தற்போது காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் சர்தாருக்கான முகாம் அலுவலகத்தில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. எனவே அவர் நகராட்சி பொறியாளர் முகாம் அலுவலகத்தில் தங்கியுள்ளார். அங்கு நேற்று காலையில் திடீரென்று காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சிவபாதசேகரன் தலைமையில் 8 பேர் வந்து சோதனை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையின்போது யாரையும் அவர்கள் முகாம் அலுவலகத்துக்குள் அனுமதிக்கவில்லை. அப்போது சில முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றினர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:

ஊட்டியில் சர்தார் பணியாற்றியபோது பணியாளர்கள் நியமனத்திலும், ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஒதுக்குவதிலும் அதிக அளவு கமிஷன் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் இவர் மீது ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு அவர் இடமாற்றம் செய்யப் பட்டார்.

தாங்கள் பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக சர்தாரிடம் ஏதேனும் ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்கள் உள்ளனவா என்று சோதனை நடத்தும்படி சென்னையில் உள்ள எங்கள் தலைமை அலுவலகத்தில் ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீஸார் கேட்டிருந்தனர். அங்கிருந்து வந்த உத்தரவின்படி காஞ்சிபுரத்தில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளோம். அதேபோல் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சில முக்கிய ஆவணங்கள் மட்டும் கிடைத்துள்ளன. அவற்றை சென்னைக்கு அனுப்பியுள்ளோம்.

காஞ்சியில் இருந்து வந்த புகார்

சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள சில ஒப்பந்ததாரர்கள் எங்களிடம் வந்து ஒப்பந்தப் பணிகளுக்கு அதிக அளவு கமிஷன் தொகை பெறப்படுவதாகப் புகார் கூறினர். இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகார் அளிக்கும்படி எங்கள் அதிகாரிகள் கேட்டனர். ஆனால், புகார் கூறியவர்கள் அதற்கு தயாராக இல்லை. எனவே அச்சம்பவம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊட்டியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரித்துவரும் வழக்குக்கு வலுசேர்க்கும் வகை யில் ஆவணங்களைச் சேகரிக்க தற்போது சோதனை நடத்தப் பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x