Published : 05 Aug 2023 06:26 AM
Last Updated : 05 Aug 2023 06:26 AM

‘நான் முதல்வன்’ ஊக்கத்தொகை திட்டத்தை இளைஞர்கள் பயன்படுத்த முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை: ‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வு பிரிவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகை திட்டத்தை யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கல்லூரி மாணவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் “நான் முதல்வன்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் தமிழக மாணவர்களுக்கு உதவும் நோக்கில், 2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாகத் தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.7,500 வழங்குவதற்கான சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்குத் தயாராவதற்காக ரூ.25,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதோடு அவர்களது செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தோடும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஐஏஎஸ் ஆர்வலர்களுக்கான இந்த மாதாந்திர ஊக்கத்தொகை திட்டமானது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் செயல்படுத்தப்படும். கடந்த சில ஆண்டுகளாக, ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதைக் கருத்தில் கொண்டு அகில இந்திய போட்டித் தேர்வுகளில் மீண்டும் தமிழகத்தை முன்னிலைக்குக் கொண்டுவருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மதிப்பீட்டுத் தேர்வை எழுத ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஐஏஎஸ் தேர்வுக்கான வயது வரம்பின் அடிப்படையில் மதிப்பீட்டுத் தேர்வுக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ள 1,000 மாணவர்களில் 21-22 வயது கொண்ட புதிய ஆர்வலர்கள் 50 பேருக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

பட்டப்படிப்பின் போதே, போட்டி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு மிகப்பெரிய பயனளிக்கும். மருத்துவம், கால்நடை அறிவியல் மற்றும் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு மாணவர்களுக்கு சலுகை அளிக்கப்படும். என்றாலும், அது குறித்து திறன் மேம்பாட்டுக் கழகமே முடிவு செய்யும். மதிப்பீட்டுத் தேர்வுக்கு https://nmcep.tndge.org/apply_now என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17-ம் தேதி கடைசி நாளாகும்.

தொடர்ந்து செப். 10-ம் தேதி தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் மதிப்பீட்டு தேர்வு நடைபெறும். வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். தேர்வு மதிப்பெண் பட்டியலிலிருந்து சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கிவரும் அகில இந்திய குடிமைப் பணிபயிற்சித் தேர்வு மையம், கோயம்புத்தூரிலும் மதுரையிலும் இயங்கிவரும் அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணி பயிற்சி நிலையங்களுக்கும் சேர்க்கை நடைபெறும்.

இது தவிர வங்கித் துறை, ரயில்வே துறை, எஸ்எஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் மற்ற போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும்வகையில் கட்டணமில்லா பயிற்சித் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின்கீழ், 5000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி, பாடநூல்கள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,‘‘தமிழக இளைஞர்கள் இந்திய ஆட்சிப்பணிக்கு அதிகம் தேர்வாக வேண்டும் என்று பல முன்முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகை திட்டத்தை யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் நம் இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x