Published : 24 Nov 2017 09:49 AM
Last Updated : 24 Nov 2017 09:49 AM
தமிழக மீனவர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கண்ட பிறகே வருணா ரோந்துக் கப்பலை இலங்கைக்கு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய கடலோரக் காவல்படையில் 30 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்ட ‘வருணா’ ரோந்துக் கப்பலை இலங்கை கடற்படைக்கு பரிசளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல்களால் தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில் இலங்கை கடற்படையின் அராஜகத்துக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இலங்கை அரசால் எவ்வித இடையூறும் ஏற்படாது என்ற உறுதியை இலங்கையிடம் இருந்து பெற வேண்டும். அதன் பிறகு, மத்திய அரசு நல்லெண்ண அடிப்படையில், நம் வருணா கப்பலை இலங்கைக்கு வழங்க முன்வரலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT