Published : 01 Aug 2023 04:50 PM
Last Updated : 01 Aug 2023 04:50 PM

என்ஐஏ கைது செய்த மதுரை வழக்கறிஞருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மதுரை வழக்கறிஞர் முகமது அப்பாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகவும், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது அப்பாஸ், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர் ஆர்.விவேகானந்தன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்காக ஆஜரானதற்காக மனுதாரரை கைது செய்துள்ளனர். எந்த ஆதாரங்களும் இல்லாமல், புலன் விசாரணை அதிகாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மனுதாரரின் பென் டிரைவ்-ஐ, கைப்பற்றியதாக என்ஐஏ அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், பென் டிரைவ் வைத்திருப்பது குற்றமாகாது. அதில் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா என கண்டறிய வேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முக்கிய தலைவராகவும், ஆயுத பயிற்சி அளிப்பவராகவும் இருந்தார் என்று, எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டியுள்ளனர் என்று வாதிட்டிருந்தார்.

அப்போது என்ஐஏ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் என்ஐஏ எச்சரிக்கையுடன் செயல்பட்டது. கடந்த மார்ச் மாதம், இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போதே முகமது அப்பாஸுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்தன. இருந்த போதும், கூடுதல் ஆதாரங்களுக்காக காத்திருந்து தற்போது வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஃபேஸ்புக் பதிவுக்காக வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது. கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் ஆடியோ சிக்கியுள்ளது. தொலைப்பேசியை ஒட்டுக் கேட்டபோது கிடைத்த தகவலின் அடிப்ப்படையிலும் அவர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் இருப்பவரின் காவலை சட்டவிரோதம் எனக் கூற முடியாது. இந்த வழக்கு தொடர்பாக கேஸ் டைரியை நீதிமன்றம் ஆய்வு செய்யலாம்" என்று வாதிட்டிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதபதிகள் இன்று பிறப்பித்த தீர்ப்பில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி முகமது அப்பாஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ள உத்தரவிட்டனர். இருப்பினும் அவருக்கு நிபந்தனைகளையுடன் ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x