Published : 01 Aug 2023 03:39 PM
Last Updated : 01 Aug 2023 03:39 PM

ஓபிஎஸ், தினகரன் கூட்டாக ஆர்ப்பாட்டம்: கோடநாடு வழக்கு விசாரணையில் ‘ஆமை வேகம்’ என சாடல்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க கோரி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசும் ஓ.பன்னீர்செல்வம் அருகில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

தேனி: “ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று தேர்தல் சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அவர் ஆட்சிக்கு வந்து 30 மாதங்களாகிவிட்டன. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஆமை வேகத்தில் நடக்கிறது" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

கோடநாடு கொலை வழக்கு விசாரணையை விரைந்து நடத்தக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், செவ்வாய்க்கிழமை தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஓ.பன்னீர்செல்வம் பேசியது: "மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு இல்லத்தில் நடந்து முடிந்திருக்கிற கொலை, கொள்ளை வழக்கை துரிதமாக விசாரணை செய்ய வேண்டும். இதுகுறித்து தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியை ஆளும் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின், உரிய தண்டனையை கோடநாடு கொள்ளைக் கூட்டத்துக்கும், கொலையாளிகளுக்கும் பெற்றுத்தர வேண்டும்.

தேனியில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, ஆதரவு தெரிவித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

24.4.2017 அன்று கோடநாடு பங்களாவில், காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து, அதன் தொடர்ச்சியாக, கிருஷ்ண பகதூர் என்ற காவலாளியை படுகாயப்படுத்திவிட்டு, அதன் தொடர்ச்சியாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜையும் கொலை செய்துவிட்டு, பின்னர், இந்த வழக்கில் குற்றவாளியாக கூறப்பட்ட சயான் அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோரை லாரி ஏற்றி கொலை செய்துவிட்டு, விபத்து ஏற்படுத்தி சயான் மனைவியும் குழந்தையும் படுகொலை செய்யப்பட்டனர்.

கோடநாடு பங்களாவில், கணினி ஆப்ரேட்டராக இருந்தவரையும் கொலை செய்யப்பட்டார். இத்தனையும் நடந்தபிறகு, அந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டம் நம்முடைய எண்ணத்தை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் ஸ்டாலின், தான் முதல்வராக வந்தால், 3 மாதங்களுக்குள் - 90 நாட்களுக்குள் கோடநாடு பங்களாவில் நடத்தப்பட்ட கொள்ளை, மற்றும் கொலையையும் கண்டுபிடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வழங்குவேன் என்று உறுதியளித்துதான் அவர் ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்றைக்கு 30 மாதங்களாகி விட்டன. இந்த வழக்கு இன்னும் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது" என்று அவர் பேசினார்.

முன்னதாக, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x