Published : 31 Jul 2023 02:55 PM
Last Updated : 31 Jul 2023 02:55 PM

கோயில் நிலங்களை சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்வதை தடுக்க சுற்றறிக்கை: பதிவுத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் | கோப்புப்படம்

சென்னை: கோயில் நிலங்களை சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்வதை தடுக்கும் வகையில் உடனடியாக அனைத்து பதிவுத் துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "சென்னையை சேர்ந்த அம்மாயி அம்மாள் என்பவர் அடையாறில் உள்ள தனது நிலத்தை
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு எழுதி வைத்தார். கோயிலுக்கு கொடுக்கப்பட்ட இந்த நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்க கோரி அளிக்கப்பட்ட மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டது. இந்த நிலம் மீட்கப்பட்டு கோயில் பயன்பாட்டுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான அனைத்து ஆவணங்களையும் சேகரித்து, வருவாய் துறை ஆவணங்களுடன் உறுதிபடுத்த வேண்டும். அதன்படி, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கோயில் நிலங்களை சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்வதை தடுக்கும் வகையில் உடனடியாக அனைத்து பதிவுத் துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இந்த உத்தரவை ஆறு மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x