Published : 31 Jul 2023 01:54 PM
Last Updated : 31 Jul 2023 01:54 PM

டி.கே.சிவகுமார் சொத்துக் குவிப்பு வழக்கு: கர்நாடக ஐகோர்ட் உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

டி.கே.சிவகுமார் | கோப்புப்படம்

புதுடெல்லி: கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் சிபிஐ விசாரணைக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக பிப்.10-ம் தேதி கர்நாடகா உயர் நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சி.டி.ரவிக்குமார் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்ற தடையில் தலையிட மறுத்து, சிபிஐ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, சிபிஐக்கு ஆதரவாக உத்தரவுகள் இருந்தும், உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது என்று தெரிவித்தார்.

டி.கே.சிவகுமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்துதான் சிபிஐ வழக்கு தாக்கல் செய்துள்ளது. ஆனால், உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்சின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர மறுத்துவிட்டதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற அமர்வு, உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவில் தலையிடப் போவதில்லை என்று கூறி, வழக்கை விரைந்து முடிக்குமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது.

வழக்கு பின்னணி: கர்நாடக காங்கிரஸ் தலைவரும், அம்மாநில துணை முதல்வருமான டி.கே.சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத‌ ரூ.74 கோடி மதிப்பிலான சொத்துகளின ஆவணங்கள் சிக்கின. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்த நிலையில், 2020-ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்ற‌ப்பட்டது. அதன்பேரில் டி.கே.சிவகுமார் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட‌து.

இந்நிலையில், சிபிஐ விசாரணைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவகுமார்மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர் நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 10-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட‌து குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x