Published : 15 Nov 2017 04:38 PM
Last Updated : 15 Nov 2017 04:38 PM
போதிய பாதுகாப்புக் கருவிகளை வழங்கக்கோரி புதுச்சேரி, காரைக்கால் உட்பட 4 பிராந்தியங்களிலுள்ள 14 தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு ஊழியர்கள் இன்று புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநில தீயணைப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க வேண்டும், தீயணைப்பு ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும், தீயணைப்புத்துறைக்கு இயக்குனர் பதவியை உருவாக்க வேண்டும், ஓவர்டைம் அலவன்சை 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், தீயணைப்புத் துறைக்கு புதிய வாகனங்களை வாங்க வேண்டும், தீயணைப்பு வீரர்களுக்கு பாதுகாப்புக் கவசம் மற்றும் கருவிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீயணைப்பு வீரர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் அறிவித்தபடி இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் உள்ள 14 தீயணைப்பு நிலையங்களில் பணிபுரியும் 250 தீயணைப்பு வீரர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் காரணமாக தீயணைப்புப் பணி மட்டுமே மேற்கொள்ளப்படும். அலுவலக ரீதியிலான பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் டிசம்பர் 1-ம் தேதி முதல் தீயணைப்பு வீரர்கள் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்வோம் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT