Last Updated : 27 Jul, 2023 04:00 AM

 

Published : 27 Jul 2023 04:00 AM
Last Updated : 27 Jul 2023 04:00 AM

கோவை - சிங்காநல்லூர் சந்திப்பில் புதிய மேம்பாலம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது நெடுஞ்சாலைத் துறை

கோவை - திருச்சி சாலை சிங்காநல்லூர் சிக்னல் சந்திப்புப் பகுதி. (கோப்புப் படம்)

கோவை: கோவை சிங்காநல்லூர் சந்திப்பில் புதிய மேம்பாலம் கட்ட, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது.

கோவை மாநகரில், அதிக வாகனப் போக்குவரத்து நிறைந்த இடங்களில், திருச்சி சாலை சிங்காநல்லூர் சந்திப்பு முக்கியமானதாகும். நான்கு முக்கிய சாலைகள் சந்திக்கும் இப்பகுதியில் ‘பீக் ஹவர்ஸ்’ நேரங்களில் மட்டுமின்றி எப்போதும் வாகன நெரிசல் உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் சிங்கா நல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் தொலைதூர பேருந்துகள் திருச்சி சாலையில் ஒண்டிப்புதூர் நோக்கி திரும்பும் போது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

இதை தவிர்க்க, சிங்காநல்லூர் சந்திப்பில் மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது. மேலும், என்.எஸ்.ஆர் சாலை - சிவானந்தா காலனி சாலை சந்திப்பு, சரவணம்பட்டி - காளப்பட்டி சாலை ஆகியவற்றிலும் மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. இதில் சிங்கா நல்லூர் சந்திப்பில் மேம்பாலம் கட்ட ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கோவைப் பிரிவு உயர் அதிகாரி கூறும்போது,‘‘தேசிய நெடுஞ்சாலை எண் 181-க்கு ( கோவை - குண்டல்பேட்டை சாலை ) உட்பட்ட சிங்கா நல்லூர் சந்திப்பில் ஒண்டிப்புதூர் - ராமநாதபுரம் வழித் தடத்தில் ரூ.141 கோடி மதிப்பில் 2.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு 17.60 மீட்டர் அகலத்துக்கு 4 வழித் தடமாக மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

சாந்திசோஷியல் சர்வீஸ் அருகிலிருந்து உழவர் சந்தை வரை இம்மேம்பாலம் கட்டப்படும். இதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி ஒப்பந்தப் புள்ளி திறக்கப்படும். அதில் கலந்து கொண்ட நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுந்த நிறுவனத்திடம் பாலம் கட்டும் பணி ஒப்படைக்கப்படும்.

அதேபோல், தேசிய நெடுஞ்சாலை எண்: 181-க்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சாலையில் என்.எஸ்.ஆர் சாலை பிரிவு சந்திப்பு அருகிலிருந்து சிவானந்தா காலனி செல்லும் சாலை வரை 2 சிக்னல்களை கடக்க வேண்டியுள்ளது. இவற்றை தடுக்க என்.எஸ்.ஆர் சாலை சந்திப்பு- சிவானந்தா காலனி சாலை பிரிவு வரை ரூ.60 கோடி மதிப்பில் 900 மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

என்.எஸ்.ஆர் சாலை பிரிவிலிருந்து தொடங்கி அரசு பேருந்து நிலையம் அருகே வரை இம்மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளி அடுத்த மாதம் கோர வாய்ப்புள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 948-க்கு ( திண்டுக்கல் - கோவை - கூடலூர் நெடுஞ்சாலை ) உட்பட்ட சரவணம்பட்டி - காளப்பட்டி சாலை சந்திப்புப் பகுதியில் ரூ.80 கோடி மதிப்பில் 1.40 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டப்பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், இதுகுறித்து பின்னர் முடிவு செய்யப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x