Published : 27 Jul 2023 05:03 AM
Last Updated : 27 Jul 2023 05:03 AM

ஜி-20 மாநாட்டு சுற்றுச்சூழல் பணிக்குழு கூட்டம்: மத்திய அரசு செயலர் தொடங்கிவைத்தார்

சென்னை: சூழலியல் மீட்டெடுப்பு, பல்லுயிர் பரவல், நீராதாரங்கள் பாதுகாப்பு, நீடித்த கடல்சார் பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக, ஜி-20 மாநாட்டின் முதல் சுற்றுச்சூழல், காலநிலை நிலைத்தன்மை பணிக் குழுக்கூட்டம் கடந்த பிப்ரவரியில் பெங்களூருவிலும், பின்னர் குஜராத் காந்திநகர், மும்பையிலும் நடைபெற்றது.

இந்நிலையில், 4-வது கூட்டம் சென்னை கிண்டியில் நேற்று தொடங்கியது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைச் செயலர் லீனா நந்தன் கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசியதாவது: அனைத்து ஜி-20 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், இந்த பணிக் குழுவில் மகத்தான பங்களிப்பு வழங்கியுள்ளனர்.

காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்த்துப் போராடுவதில், எங்களின் அர்ப்பணிப்புக்கு இது சான்றாகும்.

சென்னைக் கூட்டத்தில் இறுதிமுடிவு மேற்கொள்ள இருக்கிறோம். சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் நாடுகளுக்கு இந்த முடிவுகள் உதவும். இருநாட்கள் நடைபெறும் இந்தக்கூட்டத்தில், இதுவரை நடத்தப்பட்ட கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு, இறுதிசெய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விவாதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக, அனைத்து நாடுகளின் ஒருமித்த கருத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x