Published : 18 Nov 2017 10:48 AM
Last Updated : 18 Nov 2017 10:48 AM

புதிய ஊதிய விகிதத்தின்கீழ் நிர்ணயம்: வீட்டுவசதி வாரிய வீடுகளின் வாடகை 3 மடங்கு உயர்வு - ஏராளமான வீடுகளை அரசு ஊழியர்கள் காலி செய்ய வாய்ப்பு

புதிய ஊதிய விகிதப்படி நிர்ணயித்ததால், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடுகளின் வாடகை மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது. தனியார் குடியிருப்பைவிட அதிக வாடகை நிர்ணயித்ததால் அரசு ஊழியர்கள் பலர் வீடுகளை காலி செய்யும் நிலை உருவாகியுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பல குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகள் அரசு ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும். பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு சிறப்பு ஒதுக்கீடும் உண்டு. அரசு ஊழியர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது.

மதுரையில் ‘ஏ’ பிரிவு வீடுகளுக்கு ரூ.2690, ‘பி’ பிரிவு வீடுகளுக்கு ரூ.2640, ‘சி’ பிரிவு வீடுகளுக்கு ரூ.1505, ‘டி’ பிரிவு வீடுகளுக்கு ரூ.710 என வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி புதிய ஊதியம் அக்டோபர் மாதம் முதல் வழங்கப்படுகிறது. இதில் வீட்டு வாடகைப்படி ஒரு மடங்கு உயர்த்தப்பட்டது. மேலும் 139 சதவீத அகவிலைப்படி (டிஏ) அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் ரூ. 100 அடிப்படை சம்பளம் பெற்றவர் ரூ.239 பெறும் நிலை உருவானது. தற்போது வீட்டுவசதி வாரிய கணக்குப்படி, வீட்டு வாடகைப்படி முழுமையாகவும், அத்துடன் அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 4 சதவீதம் சேர்த்து வாடகை செலுத்த வேண்டும். இந்த தொகை வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வாடகைக்கும் குறைவாக இருந்தால், குறைந்தபட்ச வாடகையை செலுத்த வேண்டும்.

புதிய ஊதியத்தில் அடிப்படை ஊதியத்துடன் 139 சதவீத அகவிலைப்படி சேர்க்கப்பட்டதால், இதில் 4 சதவீதம் பிடித்தம் செய்யும்போது அதிக வாடகையாகிவிடுகிறது. இதுகுறித்து வீட்டுவசதி வாரிய அலுவலர் ஒருவர் கூறுகையில், மூன்று மடங்கு வரை வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. இது மிக அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. உதாரணத்துக்கு ரூ.2690 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்த வாடகை ரூ.6600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.2640 என்பது ரூ.6300 ஆகவும், ரூ.1505 என்பது ரூ.3500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட வாடகையை குறைப்பதில் வாரியம் எந்த முடிவும் எடுக்க முடியாது. அரசுதான் தலையிட வேண்டும். இதனால் 50 சதவீத வீடுகள் காலியாக வாய்ப்புள்ளது. அரசு ஊழியர் அல்லாதோருக்கு புதிய வாடகை நிர்ணயிக்கப்படும் என்றார்.

இதுகுறித்து அரசு ஊழியர் சங்க மதுரை கிழக்கு வட்டக்கிளை செயலாளர் நீதிராஜா கூறியதாவது:

வீட்டு வாடகை 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. பல ஊழியர்கள் வீடுகளை காலி செய்ய உள்ளனர். ஒரு மடங்கு வாடகையை கூடுதலாக வழங்கிவிட்டு, 3 மடங்காக வாடகை உயர்த்தியதை ஏற்க முடியாது. பராமரிப்பும் சுத்தமாக இல்லாத நிலையில் இனியும் இந்த வீடுகளில் குடியிருக்க யாரும் விரும்ப மாட்டார்கள். இங்கு நிர்ணயித்துள்ளதைவிட தனியார் வீடுகளில் ரூ.2 ஆயிரம் வரை வாடகை குறையும்.

மத்திய அரசுக்கு இணையான வீட்டு வாடகைப்படியை அளித்தால் புதிய வாடகையை செலுத்தலாம். உயர்த்தப்பட்ட புதிய வாடகையை அக்டோபர் மாதம் முதலே பிடித்து அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. சம்பள பட்டியலில் இருந்து தானாகவே புதிய வாடகை கழிக்கப்பட்டுவிடும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x