Published : 06 Jul 2023 05:35 AM
Last Updated : 06 Jul 2023 05:35 AM

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - நீலகிரி அவலாஞ்சியில் 18 செ.மீ. மழை பதிவு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமானமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

ஜூலை 5-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 18 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 15 செ.மீ., வால்பாறை, நீலகிரி மாவட்டம் மேல்பவானி ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ., கோவை மாவட்டம் சோலையாறு, சின்கோனா, தேனி மாவட்டம் பெரியாறு ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

ஆந்திரக் கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x